கிறிஸ்துமஸ்: உலகமெங்கும் உற்சாகம்... வெள்ள பாதிப்பால் தமிழகத்தில் களையிழந்த பண்டிகை
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்று உலகமெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பேராலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. மழை, வெள்ள பாதிப்பு காரணமாக, சென்னை, கடலூர், புதுச்சேரி, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கொண்டாட்டங்கள் எளிமையான முறையில் நடைபெற்று வருகின்றன.
இயேசு பிரான் அவதரித்த தினமான இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்துவ சமுதாய மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறியும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தலைநகர் டெல்லியில் கிறிஸ்துமஸ் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவின் தொப்பிகளை அணிந்து கொண்டு, தேவாலயங்களுக்கு வந்திருந்தனர். மெழுகுவர்த்தி ஏந்தி, தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வழிபட்டனர்.
டிசம்பர் மாத கொண்டாட்டம்
மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை; இதனால், சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்பட்டன. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி பிறந்ததுமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் தொடங்கிவிடும். வீடுகளில் நட்சத்திரங்கள் தொங்க விடுதல், கிறிஸ்துமஸ் மரங்கள், அலங்கார விளக்குகள், இயேசுவின் பிறப்பை விளக்கும் குடில்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் தொடங்கிவிடும். பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்புகளும் நடைபெறுவதுண்டு.
பெருமழை வெள்ளம்
தேவாலயங்களில் கேரல் பாடல்கள், இரவில் வீடுகளுக்கு வேடமிட்டு வரும் கிறிஸ்துமஸ் தாத்தா என்று பல்வேறு கொண்டாட்டங்கள் மாதம் முழுவதும் நடைபெறும். இதற்கான தயாரிப்புப் பணிகள், நட்சத்திரம் உள்ளிட்ட அலங்காரப் பொருள்கள் வாங்குவது என்று கடைகளிலும் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு பெருமழை, வெள்ளம் பேரழிவு அனைத்து உற்சாகத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டது.
வீடுகளை இழந்த மக்கள்
இந்தாண்டு டிசம்பர் முதல் தேதியில் பெய்த பெருமழையின் காரணமாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பலவேறு மாவட்டங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தங்குவதற்கு இடமின்றி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். முகாம்களும் இன்றி இப்போது ஏராளமானோர் சாலையோரங்களில் வசித்து வருகின்றனர்.
கொண்டாட்டங்கள் தவிர்ப்பு
மழை நின்று பல நாட்களுக்கு மேலாகியபோதிலும், அது வாரிக்கொண்டு சென்ற வாழ்வாதாரங்களின் மிச்சத்தை மக்கள் இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் பண்டிகைக்கு புத்தாடை வாங்குவது, வீடுகளை அலங்கரிப்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டவில்லை. மழையின் பாதிப்பிலிருந்து தப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தக் கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளனர். இதன் காரணமாக, கிறிஸ்துமஸ் பொருள்களை விற்பனை செய்வோர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தேவாலயங்கள் அறிவிப்பு
சென்னையில் தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று கத்தோலிக்க, சிஎஸ்ஐ உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ சபைகள் அறிவித்தன. சில ஆலயங்களில் கிறிஸ்துமஸ் தின பிரார்த்தனைக்கு மைக் செட்டுகள் அமைப்பதைக் கூட தவிர்க்க வேண்டும் எனவும், அதற்காக செலவாகும் நிதியை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கும்படியும் அறிவுறுத்தினர்.
மந்தநிலையில் விற்பனை
இந்த ஆண்டுக்காக தைவான், சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அலங்காரப் பொருள்களை இறக்குமதி செய்துள்ளனர் வியாபாரிகள் அவற்றை வாங்க யாரும் வரவில்லை என்பதுதான் சோகம். சூரிய சக்தியால் இயங்கும் சீரியல் விளக்குகள், பனி கிறிஸ்துமஸ் மரம், பனியில் நனைந்த மரங்கள், பனி பொம்மைகள், நடனமாடும் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி உள்ளிட்டவை இந்த ஆண்டுக்கென்று பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டன, மழையால் எதுவுமே விற்பனையாகவில்லையாம்.
80 சதவிகித பொருட்கள் தேக்கம்
மழை பாதிப்பின் காரணமாக பெரும்பாலான மக்கள் கடைகளுக்கு எதுவுமே வாங்க வரவில்லையம். எனவே இந்த ஆண்டு 80 சதவீத கிறிஸ்துமஸ் விற்பனை இல்லாமல் போய்விட்டது. இதேபோல கேக்குகள், பட்டாசு, ஆடைகள் உள்ளிட்ட பண்டிகைக்கான அனைத்துப் பொருள்கள் விற்பனையிலும் மந்தமான நிலையே நீடித்தது என்கின்றனர் விற்பனையாளர்கள்.
எளிமையான கொண்டாட்டங்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பேராலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. மழை, வெள்ள பாதிப்பு காரணமாக, கொண்டாட்டங்கள் எளிமையான முறையில் நடைபெற்றன. தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை சாந்தோம் மற்றும் பெசன்ட் நகர் பேராலயங்கள், எளிமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. புதுச்சேரியில் உள்ள கப்ஸ் திருத்தலத்தில் ஆங்கிலம், பிரஞ்சு, தமிழ் என மூன்று மொழிகளிலும் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.
வேளாங்கண்ணியில் திருப்பலி
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கியமாதா பேராலயத்தில், வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. அங்கு நடைபெற்ற பிரார்த்தனையில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளானோர் வந்திருந்தனர்.
தூத்துக்குடி தேவாலயம்
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில், தெற்காசிய மீனவ கூட்டமைப்பு சார்பாக நடுக்கடலில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. கேக் வெட்டியும், இயேசு பிரானின் புகழ்பாடியும் மகிழ்ந்தனர். கோவை, மதுரை, திருச்சி, என தமிழகத்தின் அனைத்து கிறிஸ்துவ திருத்தலங்களிலும், நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.