ரூ. 28 லட்சம் மோசடி செய்து விட்டார்.. மாஜி டிஜிபி நட்ராஜ் மீது மீண்டும் புகார்!
சென்னை: தனக்கு சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி முன்னாள் டிஜிபியும், மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவருமான ஆர்.நடராஜ் மீது ஆலந்தூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் மீண்டும் புகார் கொடுத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இவர் தொடர்ந்து இவ்வாறு புகார் கூறி வருகிறார். ஆனால் இவரது புகாரில் உண்மை இருப்பதாக தெரியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். ஆர். நடராஜும் கூட இவர் குறித்து, இவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரிகிறது. போலீஸார் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் சரவணன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். டிஜிபி அலுவலகத்திற்கு வந்து அவர் அங்கு புகார் மனுவைக் கொடுத்தார். அதில்,
சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, முன்னாள் டிஜிபி நட்ராஜ், அவரது மகன் நிதிஷ் இருவரும் சேர்ந்து 28 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை வாங்கியதாகவும், ஆனால் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தராததுடன், பணத்தையும் திருப்பித்தரவும் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
32 வயதான சரவணன், சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். மனித உரிமை அமைப்பும் நடத்துகிறார். முன்னாள் டிஜிபி நட்ராஜ், அவரது மகன் நித்தீஷ், இயக்குநர்கள் சங்கர், முருகதாஸ் ஆகியோரின் திரைப்படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியதாகவும், இதை நம்பி 5 தவணையாக ரூ. 28.50 லட்சம் கொடுத்ததாகவும் கூறுகிறார் சரவணன்.
பணம் கொடுத்தது தொடர்பாக தான் வைத்திருந்த ஆதாரங்களை நடராஜ் பறித்துக் கொண்டார் என்றும், அவரது வீட்டில் வைத்து தன்னை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டியதாகவும், அவரது மனைவி நிர்மலா அரிவாள் மனையை எடுத்துக் கொண்டு வந்து குத்தி விடுவதாக மிரட்டியதாகவும் கூறுகிறார் இந்த சரவணன்.