அரசியல் வெற்றிடத்தை சினிமா கவர்ச்சி கொண்டு நிரப்ப முடியாது: திருமாவளவன்
ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத வெற்றிடத்தை சினிமா கவர்ச்சி கொண்டு நிரப்ப முடியாது என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத வெற்றிடத்தை சினிமா கவர்ச்சி மட்டும் கொண்டு நிரப்பி விடமுடியாது என்று நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் நடந்த விழா ஒன்றில் எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய அரசியல் பேச்சு தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் எம்.ஜி.ஆர் ஆட்சி கொடுப்பேன், தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்கிற பேச்சு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த திருமாவளவன், எம்.ஜி.ஆர். வழியில் நல்லாட்சி அமைப்பேன் என்று அவர் கூறியிருப்பதை பொது மக்கள் எந்த அளவிற்கு அங்கீகரிக்கிறார்கள் என்பதைவிட ரஜினியின் ரசிகர்கள் அதை ஏற்று கொள்வார்களா என்று தெரியவில்லை.
ஜெயலலிதா மறைவு, கலைஞரின் முதுமை ஆகியவற்றால் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை வெறும் சினிமா கவர்ச்சியின் மூலம் நிரப்பி விட முடியும் என்று தான் நம்பவில்லை என்றும், எம்.ஜி.ஆர் ஆட்சி குறித்து பேசி இருப்பது அதிமுக ஓட்டுகளை வேண்டுமானால் கவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஜினிகாந்திற்கு சக போட்டியாளரான கமலும் அரசியலில் இருப்பதால், ரஜினியால் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியுமா என்பது சந்தேகமே? இவர்கள் முன் வைக்க போகும் அரசியல் கொள்கை செயல் திட்டங்கள் மக்களிடத்தில் எடுபடப் போகிறதா? அல்லது இவர்கள் நம்பும் சினிமா கவர்ச்சி எடுபட போகிறதா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.