அதிமுக கூட்டம்.. செல்லூர் ராஜு முன்னிலை.. கெத்தாக உட்கார்ந்திருந்த தலைமறைவு அன்புச் செழியன்!
மதுரையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் சினிமா பைனான்சியர்அன்புச்செழியன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: மதுரையில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா கூட்டத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் பங்கேற்றது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அன்புச்செழியன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் அவருக்கு அரசியலிலும், ஆட்சியிலும் பலத்தில் இருப்பவர்கள் உதவுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பார்வையாளர்கள் பிரிவில் முதல் வரிசையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் அன்புச்செழியன்.
வழக்கு நிலுவையில்
அன்புச்செழியனின் முன்ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அன்புச்செழியனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இந்நிலையில் அதிமுகவின் நிகழ்ச்சியில் அன்புச்செழியன் பங்கேற்றதன் மூலம் அவரை அரசியல் கட்சியினரும், ஆட்சியில் இருப்பவர்களுமே காப்பாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமைச்சர் வீட்டு காதணி விழா
ஏற்கனவே கடந்த ஜனவரி 28-ம் தேதி மதுரையில் நடந்த அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேரன்கள் காதணி விழா பிரம்மாண்டமாக நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், முக்கிய தொழில் அதிபர்கள், கட்சியினர் பங்கேற்றனர்.
முதன்முதலில் பங்கேற்ற அன்புச்செழியன்
இந்த விழாவில் அசோக்குமார் தற்கொலை வழக்கில் சிக்கி வெளியே தலைகாட்டாமல் இருந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கலந்துகொண்டார். இவர் ஏற்கெனவே அதிமுகவில் இருப்பதோடு அமைச்சர்களுடன் நெருக்கமாக இருப்பதால் அவர் மீது தற்கொலை வழக்கில் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக அப்போதே சர்ச்சை எழுந்தது.
மீண்டும் செல்லூரார் கூட்டத்தில்
இந்நிலையில் நேற்று மீண்டும் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்ற அதிமுக கூட்டத்தில் அன்புச்செழியன் மீண்டும் பங்கேற்றுள்ளார். தனது இல்ல நிகழ்ச்சியில் அன்புச்செழியன் பங்கேற்றது பற்றி அமைச்ச்ர செல்லூர் ராஜூவிடம் அப்போதே கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் அன்புச்செழியன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் என்ன தவறு என்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.