சினிமா பைனான்சியர் ‘கந்து வட்டி’ போத்ராவுக்கு குண்டாஸ்
கந்துவட்டி புகாரில் கைது செய்யப்பட்ட சினிமா பைனான்சியர் போத்ரா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை: கந்துவட்டி புகாரில் கைதான பைனான்சியர் போத்ரா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா கந்து வட்டிக்குப் பேர் போனவர். இவர் கந்து வட்டி புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் அவரது 2 மகன்களும் கைதாகியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை எழும்பூரைச் சேர்ந்த பகன்சந்த் பண்டாரி என்பவர் போத்ரா மீது புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்துள்ள இந்தப் புகாரில், ரூ.60 லட்சம்
மதிப்புள்ள தங்க, வைர நகைகளை அடமானம் வைத்து, ரூ.30 லட்சம் பணம் பெற்றதாகவும், ரூ.30 லட்சத்தை வட்டியுடன் திருப்பி செலுத்திய பிறகும், போத்ரா தனது நகைகளை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், போத்ரா மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவைக் காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று பிறப்பித்துள்ளார். எஸ்ஆர்எம் கல்லூரி நிறுவனர் பச்சமுத்து மீது புகார் கூறிப் பரபரப்பை ஏற்படுத்தியவர் போத்ரா என்பது குறிப்பிடத்தக்கது.