துணை நடிகையுடன் குடும்பம் நடத்திய நெல்லை பைனான்சியர் கொலை: 3 பேர் கைது
நெல்லை: சென்னையில் நடிகையுடன் குடும்பம் நடத்திய நெல்லை துணை நடிகர் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பரப்பாடியை சேர்ந்தவர் சூசைமரியான். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மகன் பீட்டர் பிரின்சோ. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பீட்டர் முதலில் பாவூர்சத்திரம், செங்கோட்டை, தென்காசி ஆகிய பகுதிகளில் கம்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். பின்னர் கம்யூட்டர் சென்டரை மூடிவிட்டு சென்னைக்கு சென்றார்.
சென்னையில் இருந்த இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரர் ஐஸ்டின் பிரின்சோ பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் பீட்டர் பிரின்சோ கொலை செய்யப்பட்டு பாளை அருகே புதைக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ‘சென்னையில் வசித்து வந்த பீட்டர் பிரின்சோ அங்கு நெல்லையை சேர்ந்த அவரது நண்பர்கள் உமா சந்திரன், ஜான் பிரின்சன் ஆகியோருடன் சேர்ந்து ஆன்லைன் வர்த்தகம் செய்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து பெங்களூர் சென்று சட்டவிரோதமாக தொழில் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். இந்த பணத்தில் மூலம் சினிமா எடுக்க பைனான்ஸ் செய்தார்.
இந்த நிலையில் சம்பவி என்ற படத்தில் நடித்த நடிகை ஸ்ருதி சந்திரலேகாவுடன் பிரின்சோவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சென்னை விசையார்பாடியில் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
பிரின்சோவுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஸ்ருதிக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே பீட்டர் பிரின்சோவிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதை அறிந்த அவரது நண்பர்கள் ஏற்கனவே அவரிடம் கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரத்தில் இருந்த ஸ்ருதி, அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பீட்டர் பிரின்சோவுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். பின்னர் பீட்டர் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தனர். உடலை காரில் நெல்லைக்கு கொண்டு வந்து பாளையங்கோட்டை டிவிஎஸ் பைபாஸ் சாலை அருகே உள்ள காட்டு பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.
இந்த நிலையில் பீட்டர் பிரின்சோவின் கார் சமீபத்தில் செல்வதை பார்த்த ஐஸ்டின் பிரின்சோ உடனே அந்த காரை மடக்கி பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அந்த காரை பிடித்து அதில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பர்க மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.