அகம்பாவம் இல்லாத ஞானி.. பாலமுரளிகிருஷ்ணா பற்றி திரை இசை பிரபலங்கள் உருக்கம் #BalamuraliKrishna
பிரபல கர்நாடக இசை ஞானி பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு, திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை: புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு திரையுலக இசைக் கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம், சங்கரகுப்பத்தில் 1930ல் பிறந்தவர் பாலமுரளி கிருஷ்ணா. 400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாலமுரளி கிருஷ்ணா உயிர், சென்னை, ஆர்.கே.சாலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று பிரிந்தது. உலகம் முழுக்க 25000க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நடத்தியவர் பாலமுரளி கிருஷ்ணா. 1967ல் பக்த பிரகலாதா படத்தில் நாரதராக நடித்தவர்.
பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு, திரையுலக இசை கலைஞர்கள் பலரும் கண்ணீரால் இரங்கல் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் கூறுகையில், 6 வயதில் மேடை ஏறியவர் பாலமுரளி கிருஷ்ணா. அவரது மறைவு இசையுலகத்திற்கே பேரிழப்பு என்றார்.
புஷ்பவனம் குப்புசாமி கூறுகையில், கர்நாடக சங்கீதத்திற்கே புகழை பெற்றுத் தந்தவர் பாலமுரளி கிருஷ்ணாதான். அவரது குரல் தனித்துவம் வாய்ந்தது. தென் இந்தியாவில், பாலமுரளி கிருஷ்ணா பாடாத சபை கிடையாது என்றார்.
சீர்காளி சிவ சிதம்பரம் கூறுகையில், சங்கீதம் மூலம் ஞானம் வழங்கிய ஞானி பாலமுரளி கிருஷ்ணா என்று புகழாரம் சூட்டினார்.
பழம் பெரும் பின்னணி பாடகி, வாணி ஜெயராம் கூறுகையில், பள்ளி பருவம் முதலே அவர் எனக்கு பழக்கம். ஆல் இந்தியா ரேடியோவில் அவரை சந்தித்துள்ளேன். சினிமாவில் அவரோடு இணைந்து பாடியுள்ளேன். ரொம்ப அன்பாக பழகுவார். 'தான்' என்கிற அகம்பாவம் இல்லாத கலைஞர். தனது வித்தை குறித்து அவருக்கு துளியளவும் கர்வமே கிடையாது. யாரையும் அலட்சியம் செய்ய மாட்டார். 5 வயது குழந்தை முதல், 90 வயதான முதியவர்களிடத்திலும் ஒரே மாதிரி பழகுவார். பாலமுரளி கிருஷ்ணா மறைவு, இழக்க முடியாத பேரிழப்பு என்றார் அவர்.