நாளைக்கு சினிமா காட்சிகள் ரத்து... சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் முழு அடைப்புக்கு ஆதரவு
சென்னை: காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் நாளை தமிழகத்தில் நடைபெறும் முழு அடைப்பிற்கு சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முழு ஆதரவை அளித்துள்ளது. இதனையடுத்து நாளை திரையரங்குகளில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகத்தில் வன்முறை நடைபெற்றது. இந்த கலவரத்தின் போது தமிழக பதிவெண் கொண்ட 100க்கும் மேற்பட்ட பேருந்துகள், லாரிகள், தனியார் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இதனை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் பந்த் போராட்டம் நடத்த அனைத்து விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், லாரி உரிமையாளர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்திற்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், லாரி உரிமையாளர் சங்கம், பால் முகவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேபோன்று, திமுக, பாமக, தமாக, தேமுதிக, சிபிஐ, மதிமுக, மமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனையொட்டி திரையரங்குகளில் நாளை சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாலை 6 மணிக்கு மேல் சினிமா காட்சிகள் திரையிடப்படும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.