சிறுதாவூர் பண விவகாரம்: புகாரில் உண்மை இல்லை - ராஜேஷ் லக்கானி விளக்கம்
சென்னை: சிறுதாவூர் பங்களாவுக்கு கன்டெய்னர் மூலம் பணம் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஆளுங்கட்சியான அதிமுக, வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் வரை பணம் கொடுத்து ஓட்டு வாங்க திட்டமிட்டுள்ளதாக பலவேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
சிறுதாவூர் பங்களாவுக்குள் சந்தேகத்தை உண்டாக்கும் வகையில் கன்ட்டெய்னர் லாரிகள் சென்றன என்றும் அதில் கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி எடுத்துச் செல்லப்பட்டது என்றும் எனவே அது குறித்து உரிய ஆய்வு செய்யவேண்டும் என்றும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியிருந்தார்.
இந்நிலையில்,தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை வந்த 4 ஆயிரத்து 700 புகார்களில் 4 ஆயிரத்து 600 தீர்வு காணப்பட்டுவிட்டது.
சிறுதாவூர் பங்களாவுக்கு கன்டெய்னர் மூலம் பணம் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.17 கோடி 31 லட்சம் பிடிபட்டது. இதில், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததால் ரூ.15 கோடி திருப்பித் தரப்பட்டுவிட்டது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 5 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்யும்படி அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.