நிருபர்களை சரமாரியாக தாக்கிய மத்திய தொழிலக படையினர்... நிருபர் காயம் - கேமராக்கள் உடைப்பு
நெய்வேலி: நெய்வேலியில் நேற்று மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர், என்எல்சி தொழிலாளர்கள் மீது வெ்றித் தாக்குதல் நடத்தினர். முதலில் ஒரு தொழிலாளரை சுட்டுக் கொன்ற பின்னர் அதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது வெறித்தனமாக தடியடி நடத்தினர். இதில் பத்திரிக்கையாளர்களையும் அவர்கள் விடவில்லை.
பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு நிருபர் காயமடைந்தார். பல கேமராக்கள் உடைக்கப்பட்டன.
நெய்வேலி 2 வது சுரங்க பகுதியில் நேற்று பிற்பகலில் ஒப்பந்த தொழிலாளி ராஜ்குமார் என்பவருக்கும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை காவலர் நோமன் என்பவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது காவலர் நோமன் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி ராஜ்குமார் அதே இடத்தில் மூளை சிதறி துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தையும் , மத்திய தொழிலக பாதுகாப்பு படையையும் எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் மீது தொழிலகப் பாதுகாப்புப் படையினர் சரமாரியாக தடியடி நடத்தி ஓட ஓட விரட்டினர்.
இந் நிகழ்வை பத்திரிகையாளர்கள் படம் பிடித்துக்கொண்டிருந்த போது மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 100 க்கும் மேற்பட்டோர் நுழைவாயிலுக்கு வெளியில் வந்து அவர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் தொழிலக பகுதியில் மட்டுமே பாதுகாப்பு பனி மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதை மீறி வெளியே வந்து தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் நெய்வேலி கேப்டன் டிவி செய்தியாளர் சீனுவாசலு மீது தடியடி நடத்தியதில் பலத்த காயத்துடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அத்துடன் அவர் வைத்திருந்த விலையுயர்ந்த கேமராவும் உடைக்கப்பட்டது. மேலும் சில செய்தியாளர்களும் தாக்குதலுக்குள்ளானார்கள். அவர்களின் கேமராக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.