சென்னை ஹைகோர்ட்டுக்கு மத்திய பாதுகாப்புப் படை எதற்கு? தலைமை நீதிபதி அமர்வு விளாசல்
சென்னை ஹைகோர்ட்டுக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் தேவையில்லை என்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ஜி.ரமேஷ் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னை ஹைகோர்ட்டுக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் பாதுகாப்பு ஏன் என்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ஜி.ரமேஷ் தலைமையிலான அமர்வு அதிருப்தி தெரிவித்தது.
கடந்த 2015ஆம் ஆண்டில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கறிஞர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் மூலம் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு தர உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழக காவல் துறையை மாநில அரசு திரும்ப பெற்றது. இந்நிலையில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படைக்கு ஆண்டுக்கு ரூ.63 கோடி செலவிடப்படுவதாக பால்கனகராஜ் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கு மீது தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ஜி.ரமேஷ் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு, ஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எஃப் படையின் பாதுகாப்பு தேவையில்லை. அவர்களை ஒதுங்க சொல்லுங்கள்.
நீதிமன்றத்துக்கு வரும் ஊழியர்கள் சிறைக்கு வருவதை போல் உணர்கின்றனர். மத்திய பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட இது என்ன ராணுவ நீதிமன்றமா? மக்கள் நீதிமன்றம்தானே. மத்திய தொழிலக படை பாதுகாப்புக்கு உத்தரவிட்டது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.