சென்னை வந்திறங்கியது சிஐஎஸ்எப் படை.. நவ.16 முதல் ஹைகோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக வடமாநிலங்களில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இன்று சென்னை வந்தனர். ரயில் மூலமாக இன்று அதிகாலை 3 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியை சேர்ந்த 650 வீரர்கள் வந்து இறங்கினர். மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் 500 பேர் சென்னை உயர்நீதிமன்றத்திலும், 150 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் பணியமர்த்தப்படவுள்ளனர்.
சென்னை ஹைகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி, கடந்த செப்டம்பர் மாதம் 14ம்தேதி வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலின் அறையை முற்றுகையிட்டு அவர்கள் கோஷம் எழுப்பினர். இதேபோல மதுரை ஐகோர்ட்டு கிளையை சேர்ந்த வக்கீல்கள் சிலர் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணையின் போதும் ஹைகோர்ட்டு மதுரை கிளை வக்கீல் சங்க நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பினர்.
இதை தொடர்ந்து தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் தாமாகவே முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, சென்னை ஹைகோர்ட்டு பாதுகாப்பு பணியில் மத்திய போலீசாரை ஏன் ஈடுபடுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பி மத்திய- மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க சம்மதம் தெரிவித்தது. ஆனால் தமிழக அரசின் பாதுகாப்பே போதுமானது என்று தமிழக அரசு மனுதாக்கல் செய்தது. இது தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த அக்டோபர் 30ம்தேதி அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் நவம்பர் 16ம்தேதி முதல் சென்னை ஹைகோர்ட்டு பாதுகாப்பு பணியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும். 6 மாத காலம் பரீட்சார்த்த முறையில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பணிக்கான செலவு தொகை ரூ.16.60 கோடியை தமிழக அரசு மத்திய அரசிடம் வழங்க வேண்டும் என்றும், ஹைகோர்ட்டு உத்தரவிட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசும் இந்த பணத்தை மத்திய அரசிடம் வழங்கியது. இதையடுத்து ஹைகோர்ட்டு வளாகத்தில் ஹைகோர்ட்டு செயல்படும் பகுதியில் மட்டும் மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன. இது தொடர்பாக ஹைகோர்ட்டு நீதிபதிகள், மத்திய-மாநில போலீஸ் அதிகாரிகள், வக்கீல் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதையடுத்து ஹைகோர்ட்டு வளாகத்தை தனியாக பிரித்து 8 அடி உயரத்துக்கு தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவு வாயிலை ஹைகோர்ட்டு பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நுழைவு வாயிலில் இருந்து அரசு பிளீடர் பழைய அலுவலகம் வழியாக என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நுழைவு வாயில் வரை 300 அடி நீளத்துக்கு இந்த தடுப்பு வேலி அமைக்கப்படுகிறது.
இந்தநிலையில் ஹைகோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக வடமாநிலங்களில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இன்று சென்னை வந்தனர். ரயில் மூலமாக இன்று அதிகாலை 3 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியை சேர்ந்த 650 வீரர்கள் வந்து இறங்கினர். பின்னர் இவர்கள் அனைவரும் கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் உள்ள சமூக நல கூடத்தில் தங்கியுள்ளனர். வருகிற 16ம்தேதியில் இருந்து ஹைகோர்ட்டு வளாகத்தில் கீழ் நீதிமன்றங்கள் தனியாக செயல்படும். இங்கு மாநில போலீசாரே பாதுகாப்பு பணியை மேற் கொள்வார்கள்.
மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் 500 பேர் சென்னை உயர்நீதிமன்றத்திலும், 150 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் பணியமர்த்தப்படவுள்ளனர்.