என்எல்சி தொழிற்சங்க தேர்தலிலும் பணம் கொடுத்த அதிமுக, திமுக.... 'வெச்சு செஞ்ச' மார்க்சிஸ்ட்....
நெய்வேலி: என்.எல்.சி. தொழிற்சங்க தேர்தலிலும் பணத்தை வாரி இறைத்த அதிமுக, திமுகவை வீழ்த்தி சாதித்து இருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
நெய்வேலி என்.எல்.சி.யில் தொழிலாளர்களின் கோரிக்கைகள், ஊதியம் தொடர்பாக நடக்கும் பேச்சுவார்த்தைகளில் தி.மு.கவின் தொ.மு.ச, அ.தி.மு.கவின் அண்ணா தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவை பங்கேற்றுப் பேசி வந்தன.
இந்நிலையில் ஊழியர் சங்கத் தேர்தலில் 51% வாக்குகளை வாங்கும் தொழிற்சங்கங்களுக்கே பேச்சுவார்த்தையில் பங்கேற்க அனுமதி என அறிவித்தது என்.எல்.சி நிர்வாகம். இதற்காக நடந்த தேர்தலில் 4,828 வாக்குகளைப் பெற்று முதன்மைச் சங்கமாக உருவெடுத்திருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ.
அதிமுக, பாமக தோல்வி
இதற்கு அடுத்ததாக தி.மு.கவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் 2,426 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆனால் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம், பாமகவின் பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவை அங்கீகாரத்தை இழந்திருக்கிறது.
4 முறை ரகசிய வாக்கெடுப்பு
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறுகையில், தொழிற்சங்க அங்கீகாரத்திற்கு 4 முறை முறை ரகசிய வாக்கெடுப்பு நடந்தன. இறுதியில் எங்கள் சங்கம் முதன்மை சங்கமாக உருவெடுத்திருக்கிறது.
பணம் கொடுத்த அதிமுக, திமுக
கடந்த காலங்களில் திமுக, அதிமுக தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைகளின் போது தொழிலாளர்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டனர். ஆனால், எந்த இடத்திலும் சமரசத்திற்கு இடம் கொடுக்காமல் போராடி வந்தோம். தேர்தலில் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக திமுகவும் அதிமுகவும் ஓட்டுக்கு ரூ4,000 கொடுத்தார்கள். பணத்தை வாரியிறைத்தும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை என்றார்.
சாதித்த சிபிஎம்
சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவை வீழ்த்த மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக தமாகா என பெரும் படை களமிறங்கியது. ஆனால் இந்த அணியால் வெல்ல முடியாமல் போனது. தற்போது என்.எல்.சி. தொழிற்சங்க தேர்தலிலும் திமுக, அதிமுகவுக்கு எதிராக களமிறங்க மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிபிஎம் வெற்றி பெற்று சாதித்திருப்பதை கொண்டாடுகிறார்கள் காம்ரேடுகள்.