அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் இல்லை... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
தமிழக உள்ளாட்சி தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடத்த வாய்ப்பில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தொகுதி மறுவரையறை நடத்தி முடித்த பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அப்பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. உள்ளாட்சி நிர்வாகம் முடங்கி கிடப்பதால் தேர்தலை 15 நாள்களுக்கு நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் கே.கே.ரமேஷ் பொது நல வழக்கை தொடுத்துள்ளார்.
இதனிடையே உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுகவும் ஒரு வழக்கை தொடுத்துள்ளது. ரமேஷ் தொடுத்த வழக்கு திமுகவின் வழக்குடன் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசும், மாநில தேர்தல்ஆணையமும் முன்வைத்த வாதத்தில் கூறுகையில் 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை வைத்து தொகுதி மறுவரையறை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடையும். அதன் பின்னர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிக்கைகள் தயார் செய்வதற்கு பிப்ரவரி மாதம் ஆகும். எனவே 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளன.