கிரானைட் வழக்கு: பி.ஆர்.பி விடுதலையை எதிர்த்து அப்பீல்... அன்சுல் மிஸ்ரா மீதான நடவடிக்கைக்கு ஷாக்!
மதுரை: உயர் நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி, கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரிய வழக்குகளைத் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவு நீதித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சட்ட விரோதமாக அனுமதியின்றி கிரானைட் கற்களை அடுக்கி வைத்த வழக்கில் இருந்து பி.ஆர்.பழனிச்சாமி விடுதலை விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பிரகாசம் கண்டனம் தெரிவித்ததோடு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரை தொடர்பாக உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தெரிவித்துள்ளார்.
கிரானைட் கொள்ளை
தமிழகத்தை உலுக்கிய பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பாக குவாரி அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உட்பட பலர் மீது மேலூர், கீழவளவு, மேலவளவு, ஒத்தக்கடை காவல் நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 98 வழக்குகளில் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், கனிமவளம் திருட்டு, வெடிபொருள் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற சிறப்பு சட்டப் பிரிவு களின் கீழ் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அன்சுல் மிஸ்ரா
மதுரை கீழவளவு, கீழையூர் பகுதிகளில் பட்டா நிலங்களில் பிஆர்பி கிரானைட்ஸ் பங்குதாரர் பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ சிவராமன் சகோதரர் சகாதேவன் ஆகியோர் பதுக்கிய கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா 2013-ல் இரு வழக்குகளை தாக்கல் செய்தார்.
மகேந்திரபூபதி தீர்ப்பு
அந்த வழக்குகளை விசாரித்த மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி நேற்று அதிர்ச்சியளிக்கும் உத்தரவை பிறப்பித்தார். கிரானைட் குவாரி உரிமம் பெற்றவர்கள் கிரானைட் கற்களை குவாரிக்கு வெளியே பட்டா நிலங்களில் அனுமதியின்றி வைத்திருந்தால், மாவட்ட ஆட்சியர் ரூ.25 ஆயிரம் அபராதம் மட்டும் விதிக்கலாம்.
மாவட்ட ஆட்சியரா?
உரிமம் பெறாதவர்கள் கிரானைட் கற்களை வேறு இடத்துக்கு எடுத்துச் சென்றால் ஓராண்டு சிறை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க முடியும். இந்த வழக்கை மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் இந்த வழக்கை தாக்கல் செய்தபோது மாவட்ட ஆட்சியராக இல்லை.
2 பேர் விடுதலை
அப்படியுள்ள நிலையில் ஆட்சியர் என்ற முறையில் இந்த வழக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தை அவர் மோசடி செய்துள்ளார். அதோடு மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் அவருக்கு பல்வேறு பணிகள் இருப்பதாக பொய்யான காரணங்களை கூறி அவர் ஆஜராகாமல் இருக்க அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா ஆகியோர் உத்தரவு பெற்றுள்ளனர். மேற்கண்ட இரு காரணங்களால் இவ்விரு வழக்குகளிலும் இருந்தும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது நடவடிக்கை
மாவட்ட ஆட்சியராக இல்லாமல் ஆட்சியர் என்ற முறையில் போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றிய ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா, அவருக்கு உடந்தையாக இருந்த அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா ஆகியோர் இபிகோ 181, 182, 193, 199 பிரிவுகளின் கீழ் குற்றம் புரிந்துள்ளனர். இதனால் இவர்கள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 197 (1பி) பிரிவின் படி அரசின் முன் அனுமதி பெற்று குற்றவழக்கு தொடர நீதிமன்ற தலைமை எழுத்தருக்கு உத்தரவிடப்படுகிறது என மகேந்திரபூபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அரசு குற்றச்சாட்டு
இதில் குற்றம் சுமத்தப்பட்டோருக்கு சிறியளவில் தண்டனை கிடைக்கக்கூடிய இபிகோ 379-வது பிரிவை (திருட்டு) மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, மற்ற கடுமையான பிரிவுகளின் கீழ் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு ஏற்க மறுப்பதாக மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி மீது அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அரசு சிறப்பு வழக்கறிஞர்
மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதியால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டவர்களில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷீலாவும் ஒருவர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "கிரானைட் வழக்குகளில் ஆரம்பத்தில் இருந்தே குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு மாஜிஸ்திரேட் செயல்பட்டு வருகிறார். அவர் அரசுத் தரப்பை மதிப்பதே இல்லை.
வேறு நீதிமன்றத்திற்கு மாற்றலாம்
கிரானைட் வழக்குகளின் விசாரணை முறையாக நடைபெற மேலூர் மாஜிஸ்திரேட் அவர்களை மாற்ற வேண்டும்; அல்லது கிரானைட் வழக்குகளை மேலூர் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். மேல்முறையீடு செய்யலாம்கிரானைட் வழக்குகளை விசாரணைக்கு ஏற்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்க கடந்த வாரம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு பதிலடியாக, மாஜிஸ்திரேட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அவரது இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்யவுள்ளோம் என்றார்.
180 வழக்குகள்
மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு தனியார் பட்டா நிலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிரானைட் கற்களை அரசுடமையாக்கவும், இதில் தொடர்புடைய கிரானைட் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர்களாக இருந்த அன்சுல்மிஸ்ரா, சுப்பிரமணியன் ஆகியோர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இதுவரை 180 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
வழக்குகள் ஒத்திவைப்பு
இதில் 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு எதிரானவை. இதில் 2 வழக்குகள் தள்ளுபடியான நிலையில், மற்ற வழக்குகளின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி முந்தைய ஆட்சியர் சுப்பிரமணியன் தாக்கல் செய்த 34 வழக்குகள் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி முன் நேற்று விசாரணைக்கு வந்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை மே மாதம் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
இதனிடையே பி.ஆர்.பி. நிறுவனத்திற்கு சாதகமாக மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி செயல்படுவதாக, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் கூறினார். மகேந்திரபூபதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த நீதிபதி பிரகாசம் கண்டனம் தெரிவித்ததோடு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரை தொடர்பாக உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் கூறினார்.
மேல்முறையீடு
இந்த நிலையில், பிஆர்பி நிறுவனத்தின் தலைவர் பி.ஆர். பழனிச்சாமி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. கிரானைட் முறைகேடு தொடர்பான 2 வழக்குகளில் இருந்து பி.ஆர். பழனிச்சாமியை விடுவித்து உத்தரவிட்ட மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியால் ஏற்கனவே இரண்டு முறை கண்டிக்கப்பட்டவர் என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.