கரூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களிடையே மோதல்- பதற்றம்
கரூரில் பாஜகவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் உருவாகியுள்ளது.
கரூர்: கரூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
கரூரில் பாஜக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழிசையை கண்டித்து முழக்கமிட்டனர். அப்போது இரு கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கரூரில், அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட மாநில நிர்வாகிகள் பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கூட்டம் நடைபெறும் மண்டபத்தின் முன்பாக கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழிசையை கண்டித்து முழக்கமிட்டனர். அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கிருந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் பாஜக தொண்டர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் கொடியை பிடித்து இழுத்து காலில் போட்டு மிதித்தனர். இரு தரப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது போலீசார் மறியல் செய்த அனைவரையும் கைது செய்தனர்.