சாரணர், சாரணியர் இயக்கத் தலைவர் தேர்தலில் மோதல்.. எச்.ராஜா மீது குற்றச்சாட்டு
சென்னையில் சாரணர், சாரணியர் இயக்கத் தலைவர் தேர்தலில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
Recommended Video
சென்னை: சென்னை சாரணர், சாரணியர் இயக்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்று வரும் தலைவர் பதவிக்கான தேர்தலின்போது வேட்பாளர்கள் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் கடைசியாக 2010-ஆம் ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தலைவர் பதவிக்கு போட்டி உருவாகி, தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு சாரணர் அமைப்பின் செயற்குழு கடந்த மார்ச் 18-ல் கூடியது. அதைத்தொடர்ந்து, பொதுக்குழு கூட்டமும் நடந்தது. இதில் துணை விதிமுறைகளில் ஒருசில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.
எச்.ராஜா போட்டி
தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் 16-ஆம் தேதி நடைபெறும் என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும், பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குனர் பி.மணியும் போட்டியிடுகின்றனர்.
இன்றே வாக்கு எண்ணிக்கை
அதன்படி இன்று காலை சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க தலைமையகத்தில் தொடங்கியது. இன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தேர்தல் நடத்த வேண்டாம்
காலை 10.30 மணிக்கு தொடங்கவிருந்த தேர்தல் முன்கூட்டியே 10 மணிக்கு தொடங்கியது. மேலும் தேர்தல் நடைபெறும்போதே தேர்தலை நடத்த வேண்டாம் என்று மத்திய அரசு அனுப்பியதாக கூறி ஒரு கடிதத்தை வேட்பாளர் எச்.ராஜா தேர்தல் பொறுப்பாளர்களிடம் கொடுத்தார்.
தகவல் இல்லை
இதுபோன்று தேர்தலை நிறுத்துமாறு தங்களுக்கு எந்தவித உத்தரவும் வரவில்லை என்று பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். எனினும் தொடர்ந்து தேர்தல் நடைபெறாத வண்ணம் எச்.ராஜா தரப்பினர் இடையூறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்தலை நிறுத்த எச்.ராஜா முயல்வதாக எதிர்தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.