ஆம்பூர் காங்கிரஸ் பவன் யாருக்கு?... காங்.- தமாகா மோதல்... மண்டை உடைப்பு, கடை அடைப்பு!
வேலூர்: ஆம்பூரில் உள்ள காங்கிரஸ் பவன் கட்டிடம் மீதான உரிமை தொடர்பாக காங்கிரஸ் தொண்டர்களுடன் ஏற்பட்ட மோதலில் தமாகா தொண்டர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதனால் அப்பகுதியில் கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் காங்கிரஸ் பவன் கட்டிடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டிடத்தின் மீது காங்கிரஸ் மற்றும் தமாகா தொண்டர்கள் என இருதரப்புமே உரிமை கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், அந்தக் கட்டிடத்தில் நுழைந்த காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை வெளியேற்ற வாசனின் தமாகா தொண்டர்களும் அங்கு கூடினர்.
அப்போது திடீரென இருதரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. மேலும் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து நேதாஜி சாலையில் கடைகள் அடைக்கப்பட்டன. அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கு பெருமளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.