நெல்லை: இறுதி ஊர்வலத்தில் திடீர் மோதல் - போலீஸ் குவிப்பு
நெல்லை: திருநெல்வேலியில் சவ இறுதி ஊர்வலத்தில் இரு பிரிவினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை டவுன் பட்டாபத்து நபிகள் நாயகம் தெருவை சேர்ந்தவர் இசக்கி. இவர் உடல் நலக்குறைவால் இறந்து போனார். இவரது இறுதி சடங்கு நேற்று மாலை நடைபெற்றது.
இதையொட்டி உறவினர்கள் நீர்மாலை எடுப்பதற்காக தெற்கு மவுண்ட் ரோடு வழியாக ஊர்வலமாக சென்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவை சேர்ந்த சிலர் எங்கள் பகுதி வழியாக செல்ல கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சலவை தொழிலாளி மாரியப்பன் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. உடனடியாக அவர் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது. இதனால் அங்கு பதற்றம் தொற்றி கொண்டது. நெல்லை உதவி கமிஷனர் லோகநாதன் தலைமையில் அங்கு உடனடியாக போலீஸ் படை குவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாரியப்பனை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒரு பிரிவினர் மறியல் செய்ய முயன்றனர். போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் பிறகு இசக்கியின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்கு நடந்தது.
இது தொடர்பாக நெல்லை டவுன் போலீசார் விசாரணை நடத்தி பேச்சிமுத்துவை கைது செய்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.