விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு பிரிவினர் மோதல்.. செங்கோட்டையில் பதற்றம்
Recommended Video
நெல்லை: செங்கோட்டையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
செங்கோட்டை மேலூரில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும். நேற்று மொத்தம் 38 விநாயகர் சிலைகள் வண்டிமறிச்சம்மன் கோயில் முன் பிரதிஷ்டை செய்வதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
மேலூர், பெரிய பள்ளிவாசல் தெரு வழியாக பெண்கள் உள்ளிட்ட விழாக்குழுவினர் சுமார் ஆயிரம் பேர், நேற்று இரவு 9.30 மணி அளவில் விஸ்வநாதபுரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.
அப்போது இந்த தெருவை சேர்ந்த சில மக்கள், விநாயகர் சிலையை கொண்டுசெல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 500 பேர் எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டனர். இதையடுத்து விநாயகர் சிலை அந்த தெருவுக்கு வந்தபோது இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
சிலை மீதும், ஊர்வலத்தினர் மீதும் கல், பாட்டில் உள்ளிட்டவற்றை சிலர் வீசி தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் ஊர்வலத்தினரும், பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 3 போலீசார் உள்பட 10 பேர் காயமடைந்தனர். கல் வீச்சில் அப்பகுதியில் இருந்த கடைகளும் சேதமடைந்தன. 40 இருசக்கர வாகனம், 20 கார்கள் உடைக்கப்பட்டன.
போலீசார் தலையிட்டு இருதரப்பினரையும் சமரசப்படுத்தினர். ஊர்வலக் குழுவினரை பாதுகாப்பாக மீட்டு அனுப்பி வைத்தனர். விநாயகர் சிலைகளும் வேனில் பலத்த பாதுகாப்புடன் அதே தெரு வழியாக வண்டிமறிச்சம்மன் கோயில் முன் கொண்டுசென்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.
சம்பவத்தையடுத்து, தென்காசி டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.