பஸ் டே கொண்டாடிய மாணவர்கள், போலீஸார் இடையே மோதல்: எஸ்.ஐ. மீது தாக்குதல்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அருகே தடையை மீறி பஸ்டே கொண்டாடிய மாணவர்களுக்கும் அதை தட்டிக்கேட்ட போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் உதவி ஆய்வாளர்கள் தாக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்கவும், ரூட் தல போன்ற பிரச்சினைகளை முடிவு கட்ட பஸ்டே கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகத்திற்கும் உத்தரவிடப்படடிருந்தது.
இந்நிலையில், சென்னை மந்தைவெளியில் இருந்து கொரட்டூர் நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்தில் மாநில கல்லூரி மாணசர்கள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி இந்த பஸ் டே கொண்டாட்டத்தை மாணவர்கள் கொண்டாடியுள்ளனர்.
இதனிடையே அவர்கள் பஸ்சில் மாலை போட்டு, கல்லூரியின் பெயர் போட்ட பேனர் வைத்தும், தாளம் போட்டு, பாட்டு பாடி கொண்டாடி வந்தனர். இதனால் பேருந்தில் பயணிகள் மிகவும் அவதியடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள், மாணவர்களிடம் கேட்டனர்.
இதனால் மாணவர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள், போலீஸாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த டி.பி.சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சாமுவேல் (53), பொன் சாமுவேல் (48) ஆகிய இருவரும் டி.பி.சத்திரம் பேருந்து நிறுத்தம் வந்த, அந்த பேருந்தை மறித்தனர்.
அந்த பேருந்தில் இருந்த மாணவர்களை அவர்கள் இருவரும் கண்டித்தனர். இதில் ஆத்திரமடைந்த சில மாணவர்கள்,அவர்கள் இருவரையும் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த சாமுவேலும், பொன் சாமுவேலும் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து டி.பி.சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கல்லூரி மாணவர்கள் சக்திவேல், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் சில மாணவர்களை தேடி வருகின்றனர்.