குளத்தை தூர்வாரிய பொதுமக்கள்... படையெடுத்த அதிகாரிகளால் பரபரப்பு
குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட பொது மக்களுடன் அதிகாரிகளும் கை கோத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் குளத்தை தூர்வாரும் பணியில் மக்கள் ஈடுபட்டதை தொடர்ந்து அதிகாரிகளும் இணைந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யாததால் தூத்துக்குடி பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனை உணர்ந்த கலெக்டர் ரவிக்குமார் குளத்தை தூர்வாரும் பணியை அதிரடியாக மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள குடிமராமத்து திட்டம், தாய் திட்டம் போன்றவற்றை குளங்கள், கால்வாய்கள் மராமத்து பணிக்காக வடிவமைத்தார்.
அதன் கீழ் 175 குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. குடிமராமத்து பணிக்காக 64 குளங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த திட்டத்திற்காக உள்ளூர் மக்களின் பங்களிப்பு மிக அவசியம். மீதமுள்ள பணிகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்.
இதன் கீழ் லாரி, பொக்லைன் இயந்திரம் வைத்திருப்போர் வாரத்தில் ஒருநாள் இலவசமாக வந்து பணி செய்து வருகின்றனர். இவர்களுடன் அதிகாரிகளும் இணைந்து களத்ததைக் கலக்கி வருகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை கருங்குளம், விட்டலாபுரம், ஸ்ரீவைகுண்டம் ஓன்றியம் சேதுக்கு வாய்ந்தான் குலம் உள்பட 10-க்கும் மேற்பட்ட மராமத்து பணிகள் முடிந்துள்ளன. விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மண் போக மீதமுள்ள மணலை வைத்து குளத்து கரையை பலப்படுத்தி வருகின்றனர்.
இந்த முன்னோடி திட்டத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை தொடங்கும் முன் முக்கால்வாசி குளங்கள் தூர்வாரப்பட்டு பணிகள் முடிந்து விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.