நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் துப்பரவு தொழிலாளர்கள்... செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவலம்
மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியானது கடந்த 1965-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு எம்பிபிஎஸ், முதுகலை பட்டப்படிப்பு, பாரா மெடிக்கல் பாடப்பிரிவுகள் உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன.
மெட்ராஸ் மெடிக்கல் காலேஜுக்கு அடுத்த படியாக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி கருதப்படுகிறது. இங்கு மருத்துவமனையும் சேர்ந்து இயங்கி வருகிறது.
நிபுணத்துவம் என்ன?
தலைமை மருத்துவமனையான இங்கு மகப்பேறு, குழந்தை மருத்துவம், கண் மருத்துவம், மனநிலை மருத்துவம், நரம்பியல், இதயவியல், சிறுநீரகவியல், குழந்தைகள் அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி, நெப்ராலஜி உள்ளிட்ட சிறப்பு பிரிவுகள் உள்ளன.
மக்கள் கூட்டம்
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு இணையாக ஏராளமான வசதிகள் இருப்பதால் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் புறநோயாளிகளாகவும், அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இங்கு எந்நேரமும் மக்கள் கூட்டம் காணப்படும்.
பரிசோதனை கூடங்கள்
இந்த மருத்துவமனையில் 600 படுக்கை வசதி கொண்டதாகும். மேலும் இசிஜி, எக்ஸ் ரே, ரத்த பரிசோதனை உள்ளிட்ட சோதனை மேற்கொள்ளும் ஆய்வகங்கள் உள்ளன. இத்தனை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொள்ள செல்வது கடினமாக இருக்கிறது.
துப்புரவு தொழிலாளர்கள் சிகிச்சை
இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு செவிலியர்களுடன் சேர்ந்து துப்புரவு தொழிலாளர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினால் மருத்துவர்கள் இல்லை என்ற பதில் மட்டுமே வருகிறது. மேலும் மகப்பேறுகளிலும் துப்புரவாளர்களை பயன்படுத்துவதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கருத்து
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையற்ற அரசால் நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து விதமான சிகிச்சைகளையும் இவர்கள் அளிப்பதால் நோயாளிகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். இவர்களுக்கு என்ன தெரியும். இவர்களை சிகிச்சை அளிக்க அனுமதித்துள்ளனர். எனவே தமிழக அரசு போர்க் கால அடிப்படையில் மருத்துவர்களை நியமித்து நோயாளிகளின் அச்சத்தை போக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.