ஏமாற்றிய கேரளத்து பருவமழை… தண்ணீர் இல்லாமல் கண்ணீர் விடும் குற்றால அருவிகள்!
குற்றாலம்: அருவி நகரமான குற்றாலத்தில் தண்ணீர் இன்றி வெறும் பாறைகள் மட்டுமே காணப்படுவதால் அங்கு செல்லும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் வழக்கமாக தொடங்கும் பருவமழை இந்தாண்டு காலை வாரியதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக எப்போதும் மே இறுதியில் தொடங்குவது வழக்கம் இந்தாண்டு மே 30ம்தேதி தொடங்கிவிடும் என்று கேரள வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் ஜூன் 5ஆம் தேதி லேசான சாரலோடு மழை பெய்ய தொடங்கியது.
இந்நிலையில் 10தினங்கள் வரை பெய்த பருவமழை தற்போது மிகவும் பலவீனமடைந்துள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீரின் இருப்பும்,தேக்கப்பட்ட நீரின் இருப்பும் குறைந்து வருவதால் வழக்கம் போல் பெய்யும் மழை தற்போது மிகவும் குறைவாக பெய்துள்ளதால் அம்மாநிலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குற்றால சீசன்
தென்மேற்கு பருவமழையின் தாமதம் காரணமாக ஒவ்வொரு வருடமும் ஜீன் முதல் வாரத்திற்குள் சீசன் தொடங்கி விடும் குற்றாலத்தில் தற்போது ஜீன் 15ஆகியும் சாரல் மழைக்கான அறிகுறி தென்படவே இல்லை.
வியாபாரிகள் வேதனை
சீசன் கடைகளின் ஏலமோ பல லட்சங்கள் போன நிலையில் பல வித கட்டுப்பாடுகள் இதன் காரணமாக வியாபாரிகள் வேதனையில் ஒருபக்கம் தவிக்கின்றனர்.
தயார் நிலையில் குற்றாலம்
சோப்பு,ஷாம்பூ,எண்ணெய்,விற்பனை,எண்ணெய் குளியல் ஆகியவை நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டதால் மக்களின் குளியல் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகி விடக்கூடாது என நினைக்கும் அதிகாரிகள் ஒருபக்கம், அருவிக்கரைகளை துல்லியமாக குளிப்பைவர்களைக் கூட கண்காணிக்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியாகி விட்டது, காவல்துறையின் விழிப்புணர்வு அறிவிப்புகளுடன் கூடிய விளம்பர பதாகைகள் வைத்தாகி விட்டது.
வியாபாரிகள் தயார்
மெயின் அருவி,ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குழாய் ஒலிப்பெருக்கிகளின் மூலம் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் அறிவிக்கப்படுகிறது இங்குள்ள கடைகளில் பெரும்பாலான கடைகள் தொழில் போட்டியால் சிப்ஸ் கடைகளாக அலங்கரிக்கப் பட்டு வியாபாரத்திற்கு தயாராய் இருக்கிறது, அனைத்தும் செய்தாகி விட்டது.
ஹோட்டல்கள் ஜோர்
விடுதிகள்,ஓட்டல்கள் அனைத்தும் கலர்புல்லாக மாறிவிட்டது, இதற்கிடையில் குற்றாலத்தில் உள்ள இரண்டு மதுக்கடைகளிலும் போதுமான அளவு சரக்கு இருப்பு வைக்கப்பட்டுவிட்டது. ஏலத்தில் போட்ட முதலை லாபத்துடன் எடுத்து விட வேண்டும் என வியாபாரிகளும், மேலதிகாரிகளை குற்றாலத்திற்கு கூட்டி வந்து அவர்களை குளிக்கவைத்து குளிர்வித்து அவரது மனதில் இடம்பிடிக்க போட்டியிடும் அதிகாரிகளும் தயாராகிவிட்டனர்.
தென்றல் வீசுது சாரல் இல்லையே
தரமான உணவு,மற்றும் கட்டுப்பாடுகளில்லாத விலைவாசிகளும் இங்கே இப்போதே தயாராகி விட்டது.ஆனால் தென்றல் காற்றும் வீசத்தொடங்கிவிட்டது,சாரலை மட்டும் காணவில்லை.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தற்போது குற்றாலத்திற்கு வந்தால் குளிக்கலாம்,அருகிலுள்ள அருவிகளுக்கு போகலாம் என்று புறப்பட்டு வந்து ஏமாற்றத்தோடு திரும்பி செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஏராளம். காரணம் தென்மேற்கு பருவமழை பெய்தால் மட்டுமே இப்பகுதியிலுள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் களைகட்டியிருக்கும்,
வறண்ட பாறைகள்
துளியளவும் மழையின்றி எப்போதாவது வரும் இலேசான சாரலைத்தவிர வேறொன்றுமில்லை. அருவிக்கரை வறண்டு களையிழந்து போயுள்ளது. கடைவீதிகள் காற்றாடுகின்றன.
இடியும் இல்லை மழையும் இல்லை
குற்றாலத்தில் இடி இடித்தால் கும்பகோணத்தில் மழை பெய்யும் என்று ஒருபழமொழி உண்டு. ஆனால் குற்றாலத்தில் இடியையும் காணோம் மழையையும் காணோம். ‘தென் இந்தியாவின் ஸ்பா' என்று அழைக்கப்படும் பெருமை உடைய குற்றாலத்தில் 32 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்துவதால் குற்றாலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் திசைமாறி அகத்தியர் அருவிப் பக்கம் செல்லத்தொடங்கியுள்ளனர்.
படங்கள்: சசி