ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு.... கறுப்புக் கொடியேற்றி ஜவுளித்துறையினர் போராட்டம்: வீடியோ
ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஜவுளித்துறையினர் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈரோடு: ஈரோட்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி 5,000 ஜவுளி நிறுவனங்கள் கறுப்புக் கொடி கட்டி மூன்று நாட்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
மத்திய அரசு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி என்னும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை விதிக்கவுள்ளது. இந்த வரிவிதிப்பில் 0 - 28 சதவீதம் வரி, பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்படுகிறது.
இந்த வரி விதிப்பினால் நாப்கின், சில மருந்துகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் மீது 15சதவீதத்துக்கும் அதிகமான வரி விதிக்கப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் கடலை மிட்டாய்க்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி அறிவித்த பணமதிப்பிழப்பு அறிவிப்பால் இந்தியா முழுவதும் தொழில்துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளித்துறையிலும் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பால், ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே ஜவுளித்துறையின் மீது விதிக்கபப்ட்டுள்ள வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஈரோட்டில் ஜவுளி நிறுவனத்தினர் கறுப்புக் கொடி ஏற்றி, கடைகளை அடைத்து போராடி வருகின்றனர். மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளனர்.