3090 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்… 7 புதிய கல்லூரிகள்.. 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் 3090 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி 110 விதியின் கீழ் இன்று அறிவித்தார்.
சென்னை: தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிச்சாமி இன்று அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 39 கோடியில் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் என்றும், 3090 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அமைக்கப்படும் இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளில் தலா 10 கணினிகள் வீதம் பொறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு எம்ஜிஆர் பெயரில் தனிக் கட்டடம் கட்டப்படும் என்றும் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதுதவிர 43 அரசு கல்லூரிகளில் எம்ஜிஆர் பெயரில் கட்டடங்கள் கட்ட 105 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக 7 அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் புதிதாக 660 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.