பரங்கிமலை ரயில் விபத்து... பலியானவர்களுக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு
பரங்கிமலை ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி நிதியுதவி அறிவித்தார்.
சென்னை: பரங்கிமலை ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிதியுதவியை அறிவித்துள்ளார்.
சென்னை கடற்கரை சாலையிலிருந்து திருமால்பூர் நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த ரயில் மாம்பலத்தை வந்தடைந்த போது மின்சார கம்பி அறுந்து விழுந்தது. இதனால் அதன் சேவை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து விரைவு ரயில்களையும் இயக்கும் பாதையில் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டது. இதனால் ரயில்களில் கூட்டம் முண்டியடித்தது. இந்நிலையில் ரயில் பரங்கிமலையை வந்தடைந்த போது 4 ஆவது வழித்தடத்தில் நின்றது.
இங்கு ஒரு சுற்றுசுவர் உள்ளது. இந்த தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே செல்லும். இதில் மின்சார ரயில் இயக்கியதால் படிக்கட்டில் தொங்கிய பயணிகள் தடுப்பு சுவரில் மோதினர். இதில் கீழே விழுந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
அவர்களுள் சங்கர், சிவக்குமார், பாரதி, பிரவீன்குமார் ஆகிய 4 பேர் பலியாகிவிட்டனர். மீதமுள்ள 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து விபத்தில் பலியானவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிதியுதவியை அறிவித்துள்ளார்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அத்துடன் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.