திருவாரூர் பல்கலை. கட்டட விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் - ஓ.பி.எஸ்
சென்னை: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கட்டட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
திருவாரூரில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சட்டசபையில் எதிர்க் கட்சிகளின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நடந்த விபத்து தொடர்பாக சன்னாநல்லூர் வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், நன்னிலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவன மேலாளர் மற்றும் களப் பொறியாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
மேலும், இந்த விபத்தில் பலியான இருவர் ஒடிசா மாநிலத்தையும், ஒருவர் உத்தரப் பிரதேச மாநிலத்தையும் சேர்ந்தவர்கள், இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் இறந்த 5 பேரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 16 பேருக்கும், தலா ரூ. 50 ஆயிரம் நிவாராணத் தொகை வழங்கப்படும். என தெரிவித்தார்.
வேலூர் கலெக்டர் கார் விபத்து
வேலூர் மாவட்ட ஆட்சியர் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். இந்த பிரச்சினை இன்று சட்ட சபையில் எழுப்பப்பட்டது. இதற்கு முதல்வர் பன்னீர் செல்வம் விளக்கம் அளித்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர், தனது அரசு வாகனத்தில் வாகன ஓட்டுநர் மோகன் வாகனத்தை ஓட்ட, தனது உதவியாளர்கள் இருவருடன் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, கார்ணம்பட்டு கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த ராஜ்குமாரின் இருசக்கர வாகனம் மாவட்ட ஆட்சியரின் கார் மீது மோதியுள்ளது. இதில், ராஜ்குமார் காயமடைந்து சம்பவ இடத்தில் இறந்துள்ளார். பின்னால் அமர்ந்திருந்த உதயசூரியனுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
திமுகவினர் சாலைமறியல்
இறந்த ராஜ்குமாரும், காயமடைந்த உதயசூரியனும் விபத்து நடந்தபோது குடிபோதையில் இருந்துள்ளனர். துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கார்ணம்பட்டு சென்ற தி.மு.க.வைச் சேர்ந்த துரைமுருகன் மற்றும் தி.மு.க.வினர், மாவட்ட ஆட்சியரின் வாகன ஓட்டுநரைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸ் வழக்குப் பதிவு
தி.மு.க.வினர் இரண்டு இடங்களில் சாலை மறியல் செய்து, போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியதற்காக திருவலம் மற்றும் காட்பாடி காவல் நிலையங்களில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.வழக்குகள் புலன் விசாரணையில் இருந்து வருகின்றன. சாலை விபத்து குறித்த வழக்கில் புலன் விசாரணை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.