நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளால் மக்களை ஏமாற்றும் தமிழக முதல்வர்- கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை: தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கிலேயே சாத்தியமே இல்லாத அறிவிப்புகளை கடைசி நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனால் அதற்குள் தன் நினைவுக்கு வந்த திட்டங்களுக்கு எல்லாம் முதல்வர் ஜெயலலிதா அன்றாடம் அடிக்கல் நாட்டியிருக்கிறார். தேர்தல் 2 மாதங்களில் வரப்போகிறது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், அரசின் திட்டங்களுக்கு அவசரம் அவசரமாக அடிக்கல் நாட்டி விளம்பரப் படுத்திக்கொள்கின்ற ஒரே முதல்வர் அவராகத்தான் இருக்க முடியும்.
அ.தி.மு.க அரசின் பதவிக் காலம் முடியும் நிலையில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு அறிவிப்புகளையும் திட்டப் பணிகளையும் அவசர அவசரமாக தொடங்கியும், திறந்து வைத்தும் இருக்கிறார். ஐந்தே நாட்களில் ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய திட்டங்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?. 15 ஆயிரத்து 192 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார். இந்தத் திட்டங்கள் எல்லாம் எப்போது நடைமுறைக்கு வரும்?. இதற்கான தொகை நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதா?. பேரவையின் அனுமதி கிடைத்துள்ளதா?. மக்களை ஏமாற்றுவதற்காக போகிற போக்கில் அறிவிக்கப்பட்ட திட்டங்களா?.
மழையினால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வட்டி மானியம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்ட போதே அறிவித்திருக்கலாம் அல்லவா?. இடைக்கால நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் 110 ஆவது விதியின் கீழ் அறிக்கை படித்தார்களே, அப்போது கூடச் சொல்லவில்லையே ஏன்?. அப்போதெல்லாம் சொல்லியிருந்தால், அந்தச் சலுகையை உரியவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். இப்போது அறிவித்தால், ‘‘தேர்தல் பற்றிய அறிவிப்பு வந்து விட்டது; என்ன செய்ய?'' என்று பதில் கூறி தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா?.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய மழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்தோடி பல நூறு பேர் உயிரிழக்கவும், பல லட்சம் குடும்பங்கள் உடமையிழக்கவுமான பதற்ற நிலை உருவாகி, அதற்கான நிவாரணத் தொகை இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எல்லாத் திசைகளில் இருந்தும் வருகிறது.
இவ்வாறு இந்த ஆட்சியில் எந்தத் தரப்பினரையும் வாழவிடாமல் தொடர்ந்து வாட்டி வதைப்பதோடு, பசிக்கு ரொட்டித் துண்டு கேட்ட மக்களிடம் போய், ‘‘கேக் வாங்கிக் கொள்ளுங்கள்'' என்றுரைத்த கொடுங்கோலனைப் போல; அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகள் என்றும், நிறைவேற்ற முடியாத, நிறைவேற்ற நேரம் இல்லாத பல்வேறு அறிவிப்புகளையும் நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக ஜெயலலிதா கடைசி நேரத்தில் செய்திருக்கிறார். தேர்தல் பணிகளில் முதலில் ஆற்ற வேண்டிய பணி, பொதுமக்களுக்கு உண்மைகளை தெரியப்படுத்த வேண்டும் என்பதுதான். அந்தச் செய்திகளோடு இந்த உண்மைகளையும் மக்களுக்கு தெளிவாக்கிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.