உடையுமா ஓ.பி.எஸ் ஆதரவு லாபி?.. தவிடுபொடியாக்க களம் குதித்த எடப்பாடி பழனிச்சாமி!
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக உள்ள அதிகாரிகள் லாபியை உடைக்கும் வேலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறாராம்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு பதவிக்கு வந்த பன்னீர்செல்வம், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் தனக்கென ஒரு லாபியை உருவாக்கிக் கொண்டார்.
அதேசமயம், சசிகலா தரப்பிடம் போய் வேலை பார்ப்பதா என்ற கடுப்பில், ஜெயலலிதா காலத்தில் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் உள்ளிட்டவர்கள், பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒதுங்கிவிட்டனர்.
கிரிஜா வைத்தியநாதன்
தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவின், அலுவலகத்தில் சோதனை நடந்தபோதும் அமைதியாக இருந்தார் பன்னீர்செல்வம். புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் வந்தபோது, அவரது ஆலோசகளைக் கேட்டு செயல்படுத்தி வந்தார்.
சசிகலா எதிர்ப்பு அதிகாரிகள்
சசிகலா எதிர்ப்பு மனநிலையில் இருந்த அதிகாரிகளை தன்பக்கம் வைத்துக் கொண்டார் ஓ.பி.எஸ். இதனை தொடக்கத்தில் இருந்தே கவனித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. யார் யார் ஓ.பி.எஸ்ஸுக்கு விசுவாசிகள் என்பதை அவர் கவனித்து வந்துள்ளார்.
உளவுத்துறை மூலம் கண்காணிப்பு
அரசு ஒப்பந்தம் முதல் பணியிட மாற்றம் வரையில், வெளியில் இருந்து வரும் அழுத்தங்களை உளவுத்துறை மூலம் கண்காணிக்கிறார். இதுகுறித்த தினசரி அறிக்கைகள் அனைத்தும் அவர் டேபிளுக்குச் செல்கின்றன.
ஓ.பி.எஸ் தரப்பு தலையிடுகிறதா
குறிப்பாக, பன்னீர்செல்வம் தரப்பினரிடம் இருந்து ஏதேனும் கோரிக்கைகள் வருகிறதா? அவருடைய ஆதரவு அதிகாரிகளுக்குப் பணியிட மாற்றம் வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்கிறார். எந்த இடத்திலும் தன்னை மீறி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.
நியாயமாக நடந்து கொள்ளுங்கள்
இதுகுறித்து, கடந்த வாரம் அதிகாரிகளை அழைத்துப் பேசியிருக்கிறார். அதில், 'உங்கள் துறைகளில் நீங்கள் சரியாக செயல்பட்டால் போதும். அனைத்து விஷயங்களிலும் நியாயப்படி நடந்து கொள்ளுங்கள். அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்' என சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார். அவரது வார்த்தையில் தெரிந்த அழுத்தத்தை அதிகாரிகளும் உணர்ந்து கொண்டனர்" என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள்.
உடையுமா ஓ.பி.எஸ் ஆதரவு லாபி.. பொறுத்திருந்து பார்ப்போம்.