சி.ஆர்.பி.எப் வீரர் விஜயராஜ் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்
சென்னை: சென்னை: சத்தீஸ்கரில் நக்சல்களின் கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) வீரர் விஜயராஜின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. அம்பத்தூரில் உள்ள இடுகாட்டில் முழு அரசு மரியாதையுடன் 21குண்டுகள் முழங்க விஜயராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டம் மேளவாடா கிராமத்தில் உள்ள பசாரஸ்- குவாகொண்டா பகுதி வழியாக நேற்று முன்தினம் சிஆர்பிஎப் வாகனத்தில் 7 வீரர்கள் சென்றனர். அப்போது, சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்ததில் 7 வீரர்களும் உயிரிழந்தனர்.
இதில், சென்னை அருகே உள்ள அம்பத்தூரைச் சேர்ந்த விஜயராஜ், 45 என்ற வீரரும் உயிரிழந்தார்.
25 ஆண்டுகளாக மத்திய ரிசர்வ் படையில் பணிபுரிந்த வந்த இவர், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஜார்கண்ட் மாநிலங்களிலும் பணிபுரிந்துள்ளார். 1991-ம் ஆண்டு சென்னையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கான்ஸ்டபிளாக தனது பணியை தொடங்கியவர். கடந்த 28ம் தேதி உதவி சப்-இன்ஸ்பெக்டராக (ஏ.எஸ்.ஐ.) பதவி உயர்வு பெற்ற 3 வது நாளில் கண்ணி வெடி தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு தாய் மோகனா பாக்யவதி, மனைவி சர்மிளா, 10ம் வகுப்பு படிக்கும் விஷா என்ற மகளும் உள்ளனர். 3 சகோதரர்கள், 5 சகோதரிகளைக் கொண்ட விஜயராஜின் குடும்பமே, அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு சோகத்தில் மூழ்கியது. உறவினர்களும் நண்பர்களும் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
சத்தீஸ்கரில் இருந்து ஹெலி காப்டர் மற்றும் விமானம் மூலம் விஜயராஜின் உடல் சென்னைக்கு வந்தடைந்தது. நேற்று மாலை சென்னை விமானம் நிலையத்தை வந்தடைந்த விஜயராஜின் உடலை மத்திய ரிசர்வ் படையின் உயரதிகாரிகள் மற்றும் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
அரசு மரியாதையுடன் தகனம்
அம்பத்தூரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மத்திய ரிசர்வ் படையினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இன்று காலையில் அம்பத்தூரில் உள்ள வீட்டில் இருந்து இடுகாட்டிற்கு விஜயராஜின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர். இடுகாட்டில் முழு அரசு மரியாதையுடன் 21குண்டுகள் முழங்க விஜயராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.
ஜெயலலிதா இரங்கல் - ரூ.10 லட்சம் நிதி
முன்னதாக சிஆர்பிஎப் வீரர் விஜயராஜின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். 30.3.2016 அன்று சட்டிஸ்கர் மாநிலம், தாண்டேவாடா மாவட்டம், மேலவாடா என்ற இடத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையில் உதவி சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த, திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரைச் சேர்ந்த விஜயராஜ் வீர மரணம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் வீர மரணம் எய்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை உதவி சார்பு ஆய்வாளர் விஜயராஜ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
வீர மரணமடைந்த விஜயராஜ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. முதலமைச்சர் நல நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தை திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லி வழங்கினார்.