ஸ்டெர்லைட் கிளர்ச்சி- சென்னையில் முதல்வர், துணை முதல்வர் அவசர ஆலோசனை
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கிளர்ச்சி வெடித்துள்ளதால் சென்னையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் காவல் துறை அதிகாரிகளுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார கிராமத்தினர் இன்று 100-ஆவது நாளாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று அரசின் கவனத்தை ஈர்க்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்கள் கட்டுப்படாததால் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸாரின் வாகனத்தை கவிழ்த்தனர். பின்னர் முன்னோக்கி சென்ற பொதுமக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தனர்.
அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேலும் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.
போராட்டம் வன்முறையாக வெடித்துள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.