காவிரி பிரச்சினையில் திமுக கபட நாடகம்... ராஜதுரோகம் - ஈபிஎஸ், ஓபிஎஸ் குற்றச்சாட்டு
காவிரி பிரச்சனை ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வோடு பின்னிப் பிணைந்த பிரச்சனை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினையில் திமுக கபட நாடகம் ஆடுவதாக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். திமுக ராஜ துரோகம் செய்து விட்டதாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசி வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுகவினர் நடத்திய மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நிறைவடைந்தது.
காலை முதல் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, போராட்டத்தை நிறைவு செய்த பேசினார். அப்போது அவர், காவிரி பிரச்சனை ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வோடு பின்னிப் பிணைந்த பிரச்சினை என்றார். சர்க்காரிய ஆணையத்திற்கு பயந்து காவிரி ஒப்பந்தத்தை திமுக புதுப்பிக்கவில்லை. காவிரி விவகாரத்தில் திமுகதான் கபட நாடகம் போடுகிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. ஆனால் நடைமுறைப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. ஆகையால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் 19 நாட்களுக்கு நாடாளுமன்றம் முடங்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம்.
மதராஸ் மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கு இடையே 1892 மற்றும் 1924ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் காவிரி நதிநீரில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை தெளிவாக்குகின்றது.1974ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்க வேண்டும். அப்போது தமிழகத்தை ஆட்சி செய்த திமுக இந்த ஒப்பந்தத்தை புதுப்பித்திருந்தால் இந்த போராட்டத்திற்கு அவசியமில்லை.
இதையடுத்து, 1991ம் ஆண்டு நடுவர் மன்றம் இடைக்கால ஆணை பிறப்பித்தது. இதில், மேட்டூர் அணைக்கு ஆண்டு ஒன்றுக்கு 205 டிஎம்சி அடி நீர் உறுதி செய்யப்பட்டது. காவிரியின் மொத்த நீர்வளம் 740 டிஎம்சி. இதனடிப்படையில் தமிழகத்திற்கு 419 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 275 டிஎம்சி, கேரளா 30 டிஎம்சி, புதுச்சேரி 7 டிஎம்சி, உபரிநீர் 4 டிஎம்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு 10 டிஎம்சி என்று மொத்தம் 740 டிஎம்சி என்று பிரித்து நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது.
தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீர் வழங்கவேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த பங்கு நீரை உரிய காலத்தில் வழங்கிட காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க காவிரி நடுவர் மன்றம் பரிந்துரை செய்தது. அப்போதும் திமுக தான் ஆட்சியில் இருந்தது.
ஆனால், அப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம் அப்போதும், அமைக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடுத்த வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் 6 வார காலத்திற்கு காவிர் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இதனை அமைக்க தவறியதால், மத்திய அரசைக் கண்டித்து தற்போது தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
முதல்வரைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், காவிரி பிரச்சினையில் திமுக தமிழக மக்களுக்கு ராஜ துரோகம் இழைத்து விட்டது என்றார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருந்தது அப்போது எல்லாம் காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண இரண்டு கட்சிகளும் முயற்சி செய்யவில்லை என்றார்.
ஜெயலலிதாதான் காவிரி நடுவர் மன்றம் குறித்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்து வரலாறு படைத்தார். அந்த வரலாற்றினை மறைக்கும் வகையில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் இப்போது பேசியும், போராடியும் வருகின்றனர். திமுகவிற்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ போராட்டம் நடத்துவதற்கு தார்மீக உரிமை கிடையாது என்றார் ஓ.பன்னீர் செல்வம்.