ஆண்டவா ஆட்சியை காப்பாத்து.. மயிலாடுதுறை மகா புஷ்கர விழாவில் புனித நீராடிய எடப்பாடியார்!
காவிரி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடினார்.
Recommended Video
நாகப்பட்டினம்: மகா புஷ்கரத்தை ஒட்டி காவிரி ஆற்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புனித நீராடினார்.
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புனித நீராடினார். அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், கருப்பணன் உள்ளிட்டோரும் புனித நீராடினர். அரசு கொறடா ராஜேந்திரனும் காவிரியில் புனித நீராடினார்.
புஷ்கரம் என்பது நதிகளுக்கு உரிய விழா. புஷ்கரம் என்றால் தீர்த்த குரு, ஆதி குரு என்று பொருள்படும். புஷ்கரத் திருவிழா ஆண்டுதோறும் குருபகவான், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் பொழுது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறுவதாகும்.
மகாபுஷ்கர விழா
குருபெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாள் பிரவேசம் செய்வார். இந்தியாவிலுள்ள கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரா, சிந்து, பரணீதா என்ற 12 நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாடப்படுகிறது.
144 ஆண்டுக்கு ஒருமுறை
குரு பகவான் கன்னியிலிருந்து துலாம் ராசிக்கு இடம்பெயரும்போது, துலாமுக்கு உரிய காவிரி நதியில் வாசம் செய்வார் என்பது நம்பிக்கை. காவிரியில் இந்த புஷ்கரம் 144 வருடங்களுக்கு ஒருமுறை வருவதால், செப்டம்பர் 12 முதல் 24ம் தேதி வரை காவிரி மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது.
மகாளய அமாவாசை
கடந்த 12ஆம் தேதி தொடங்கி தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் புனித நீராடி வருகின்றனர். மகாளய அமாவாசை தினமான நேற்றைய தினம் லட்சக்கணக்கானோர் நீராடி காவிரி தாயை வழிபட்டனர்.
மயிலாடுதுறைக்கு வந்த காவிரி
மகா புஷ்கர விழாவை முன்னிட்டு மக்கள் நீராடுவதற்காக, காவிரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த 13ஆம் தேதி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திருச்சி வழியாக பாய்ந்தோடி இப்போது மயிலாடுதுறையை சென்றடைந்துள்ளது.
புனித நீராடிய முதல்வர்
லட்சக்கணக்கான பக்தர்கள் காவிரித்தாயை உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிலையில் இன்று மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புனித நீராடினார். ஒருமுறை மூழ்கி எழுந்து நான்கு திசைகளையும் திரும்பி பார்த்து வணங்கினார்.
அமைச்சர்கள் பங்கேற்பு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன், அமைச்சர்கள் ஓ.எஸ் மணியன், செங்கோட்டையன், காமராஜ், கருப்பணன் உள்ளிட்டோரும் காவிரியில் புனித நீராடினார்.
செப்டம்பர் 24 வரை விழா
மயிலாடுதுறையில் மகா புஷ்கர விழா கடந்த 12ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வருகையை முன்னிட்டு மயிலாடுதுறையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.