காவிரி போராட்டம்: ஆளுநர் பன்வாரிலாலை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆளுநர் மாளிகையில் சந்திக்கவுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதிமுகவும் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
தமிழகமே போராட்டகளமாக மாறியுள்ள இந்த நிலையில் நாளை எதிர்கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சூழ்நிலையில் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் சந்தித்து பேசியிருந்தார்.
அப்போது தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட போராட்டங்கள் தொடர்வது குறித்து ஆளுநர் விளக்கமளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இன்று மாலை 7 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேச உள்ளார். அப்போது தமிழக போராட்டங்கள் குறித்து ஆளுநரிடம் விளக்கம் அளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.