ஜான்சி ஈன்ற சிங்கக் குட்டிக்கு விஷ்ணு என்று பெயர் வைத்த எடப்பாடி பழனிச்சாமி
வண்டலூரில் சிங்கக் குட்டிக்கு விஷ்ணு என்று பெயர் சூட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: சென்னை வண்டலூர் பூங்காவிற்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு சிங்கக் குட்டிக்கு விஷ்ணு என்று பெயர் சூட்டினார்.
கூடுவாஞ்சேரி- சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, மான், முதலை உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், பறவைகளும் உள்ளன. வர்தா சூறாவளி புயலின்போது வண்டலூரில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனையடுத்து சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.
இங்குள்ள 5 சிங்கக் குட்டிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் வீரா (8), ஜான்சி (8), மாயா (7), நீலா (7), சிவா (10) என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டினார்.
இந்நிலையில், வீரா என்ற ஆண் சிங்கத்துடன் ஜான்சி என்ற பெண் சிங்கத்தை இனப்பெருக்கம் செய்வதற்காக பூங்கா நிர்வாகத்தினர் முடிவு செய்து கடந்த 17.10.2016ம் தேதி இன விருத்திக்காக ஒரே கூண்டில் ஜோடி சேர்த்து விடப்பட்டது.
இதனையடுத்து ஜான்சி சிங்கம் கடந்த பிப்ரவரி மாதம் அழகான ஆண் சிங்கக் குட்டியை ஈன்றது. இந்த நிலையில் இன்று வண்டலூர் பூங்காவிற்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த சிங்கக் குட்டிக்கு விஷ்ணு என்று பெயர் சூட்டினார்.
3 முறை பெயரை சொல்லி அழைக்குமாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறவே, விஷ்ணு என்று அழைக்கப்படும் என்று முன்று முறை கூறி அழைத்தார்.