ஆம்பூர் பிரியாணி இருக்கே.. அருமையான பிரியாணி.. டேஸ்ட்டா இருக்கும்.. ரசித்து பேசிய எடப்பாடியார்
ஆம்பூர் பிரியாணி குறித்து முதல்வர் பாராட்டி பேசி உள்ளார்
திருப்பத்தூர்: "இந்த ஆம்பூர் பிரியாணி இருக்கே.. நல்ல சுவையான பிரியாணி" என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரசித்து சிரித்தபடி சொல்ல கூட்டமே கை தட்டி மகிழ்ந்தது.
வேலூரைப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை என இரு புதிய மாவட்டங்கள் இன்று பிறந்துள்ளன. இந்த இரு மாவட்டங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவில் அவர் பேசியபோது மாவட்டத்தின் பெருமைகளை அடுக்கி பேசினார். அதில் ஒரு ஹைலைட்டாக ஆம்பூர் பிரியாணி குறித்து சிலாகித்துப் பேசினார் முதல்வர். இதுதொடர்பாக முதல்வர் பேசுகையில் சொன்னதாவது:
"இந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் தயாராகும் பிரியாணி மிகவும் சுவையானது, சிறப்பானது. இங்குள்ளவர்கள் மட்டுமல்லாமல் இந்த ஊர் வழியாக வருவோர் போவோர் கூட நின்று பிரியாணியை சாப்பிட்டு விட்டுச் செல்லும் அளவுக்கு அந்த பிரியாணி சிறப்பானது. இது ஆம்பூருக்கு மட்டுமல்லாமல் திருப்பத்தூர் மாவட்டத்துக்கும் பெருமையானதாகும் என்றார் முதல்வர்.
ஆம்பூர் பிரியாணி குறித்து முதல்வர் சிலாகித்துப் பேசியபோது கூட்டமே உற்சாகத்தில் ஆர்ப்பரித்தது. உண்மைதான்.. ஆம்பூரில் பிரியாணி உண்மையிலேயே மிகவும் டேஸ்ட்டானதுதான். அங்குள்ள சில குறிப்பிட்ட கடைகளில் விற்பனையாகும் பிரியாணி அருமையான சுவை கொண்டது.
அதை சாப்பிடாமல் அந்த வழியாக யாருமே போக முடியாது என்று கூறும் அளவுக்கு விசேஷமானதுதான். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் அதன் முக்கிய அடையாளமாக ஆம்பூர் பிரியாணி விளங்குவது சிறப்பானதே.