டெங்கு ஒழிக்க அரசு தீவிர முயற்சி... எதிர்கட்சிகள் அரசியலாக்குவதா? - எடப்பாடியார்
டெங்கு காய்ச்சலை வைத்து எதிர்கட்சியினர் அரசியலாக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
புதுக்கோட்டை: டெங்குவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்துவதை அரசு சவாலாக எடுத்து செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,பிரச்சினைகளை கையாள்வதில் எம்ஜிஆர் எத்தனை சிறப்பாக செயல்படுவார் என்று எடுத்துக்கூறினார்.
அதிமுக கட்சி தொடங்கப்பட்டு முதன் முறையாக கொடியேற்றிய போது அதை பலரும் கிழித்து எறிந்தனர் என்றும், கட்சி கொடியின் நடுவில் அண்ணாவின் படத்தை வைத்த உடன் யாரும் கட்சி கொடியை தொடக்கூட யோசித்தனர் என்றும் தெரிவித்தார்.
எம்ஜிஆரின் பெருமைகளை எடுத்துக்கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா ஆசியுடன் நடைபெறும் அரசு செய்த நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்டார். இது பேசும் அரசு என்பதை விட செயல்படும் அரசு என்று கூறினார்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய முதல்வர், மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாக கூறினார்.
டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்துவதை அரசு சவாலாக எடுத்து வருகிறது என்று கூறினார். மேலும் டெங்குவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் எடப்பாடி கூறினார். டெங்கு காய்ச்சலை வைத்து எதிர்கட்சியினர் அரசியலாக்குவதாகவும் கூறினார்.