வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்தாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி? தமிழகத்திற்கு பெரும் தலைக்குனிவு
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் கசிந்தன. அதில் தொகுதி வாக்காளர்களுக்கு யார் மூலம், எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்த தகவல் உள்ளது.
பணம் வழங்குவோர் பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பெயர்கள் ஆவணங்களில் உள்ளன.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் செங்கோட்டையன் பெயருக்கு கீழே எழுதப்பட்டுள்ளது. முதல்வர் பெயருக்கு நேராக 13 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் என்று எழுதப்பட்டுள்ளது. 39 ஆயிரத்து 50 வாக்காளர்களை இவர் கவர் செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பு உள்ளது.
இதேபோல ஒவ்வொரு அமைச்சர்கள் செலவிட வேண்டிய தொகை, கவர் செய்ய வேண்டிய வாக்காளர் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே. நகரில் ஒரு வாக்காளருக்கு ரூ.4000 கொடுக்க திட்டம் போடப்பட்டுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை மொத்தம், 2 லட்சத்து 62,721 ஆகும். இதில், 85% வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
ஒரு மாநில முதல்வரே இவ்வாறு பணம் சப்ளை செய்யும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது தமிழகத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
ஒரு ஓட்டுக்கு ரூ. 4000! விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் லீக்! 📎#Vijayabaskar #ITRaid pic.twitter.com/pYdVhsINUZ
— Oneindia Tamil (@thatsTamil) April 8, 2017
ஏற்கனவே ராமமோகனராவ் தலைமைச் செயலராக இருந்தபோது தலைமைச் செயலகத்தின் உள்ளே வருமான வரித்துறை சோதனை நடத்தியது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. இப்போது முதல்வர் பெயரே வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்யும் பட்டியலில் இருப்பது தமிழர்களுக்கு பெரும் வெட்கக்கேட்டை ஏற்படுத்திவிட்டது.
இதனிடையே இந்த ஆவணம் போலியானது என்று அதிமுக அம்மா கட்சி செய்தித்தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.