ஜெ. வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை.. சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு!
Recommended Video
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கொட்டும் மழையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடியேற்றினார்.
நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.
முன்னதாக திறந்த வெளி ஜீப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவல்துறையினர் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் கொட்டும் மழையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
முதல்வர் உரை
இதைத்தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் பேசியதாவது, 2வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைப்பதை பெருமையாக கருதுகிறேன்.
தமிழகத்தில்தான் தொடக்கம்
நாட்டுக்காக போராடிய வீரர்களை புகழ வேண்டும். சுதந்திரத்திற்காக எண்ணற்ற தமிழர்கள் இன்னுயிரை நீத்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த எண்ணற்ற தலைவர்கள், பொதுமக்கள் தியாகம் செய்துள்ளனர். சுதந்திரப் போராட்டத்தின் முதல் வேள்வி தமிழகத்தில்தான் தொடங்கியது.
ஜெ. வாழ்ந்த வீடு
ஜெயலலிதா வழி வந்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுகிறது. தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர் ஜெயலலிதா. காவிரி பிரச்சினையில் தீர்வு கண்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிகளவு நிதி
தென் மேற்குப் பருவ மழை காரணமாக மேட்டூருக்கு அதிக அளவில் தண்ணீர் வருகிறது. மழை வரவால் 2 முறை முழுக் கொள்ளளவை அணை எட்டியுள்ளது. ஜெயலலிதா வழி வந்த அரசு அனைவருக்கும் கல்வி தருவதில் அரசு உறுதியாக உள்ளது. பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறுவை திட்டம்
இது விவசாயிகள் நலனுக்கான அரசு. தமிழகத்தில் 2ம் பசுமைப் புரட்சியை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ளோம். டெல்டா விவசாயிகள் நலனைப் பாதுகாக்க குறுவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.100 கோடி ஒதுக்கீடு
விவசாயியாக இருப்பதில் பெருமையடைகிறேன். கூட்டுப் பண்ணை முறையை ஊக்குவிக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னையிலிருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்துக்கு முன்னுரிமை தரப்படுகிறது ஏரிகளில் படிந்துள்ள மண்ணை மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு இலவசமாக தருகிறோம்.
கொள்ளிடத்தில் கதவணை
அத்திக்கடவு அவிநாசி திட்டம் மாநில நிதியிலேயே செயல்படுத்தப்படவுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்கப்படவுள்ளது. மதசார்பற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது.
இஸ்லாமிய பெண்களுக்காக
தமிழகத்தில் அனைவரும் குடும்பம் போல வாழ்ந்து வருகின்றனர். ஜாதி, மதம் மறந்து அனைவரும் வாழ்ந்து வருகின்றனர். சென்னையில் இஸ்லாமிய பெண்கள் வசதிக்காக மகளிர் விடுதி கட்டப்படுகிறது. ஜெருசேலம் செல்லும் கிறிஸ்தவ பயணிகளின் எண்ணிக்கை 5 மடங்கு உயர்த்தப்படுகிறது.
ஊதிய உயர்வு
பிளாஸ்டிக்கை தடை செய்யும் திட்டத்தை அரசு அமல்படுத்தி வருகிறது. 7வது ஊதியக் குழு பரிந்துரைகள் குறுகிய காலத்திலேயே அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.20 கோடியில் வீடு
தியாகிகளின் ஓய்வூதியம் ரூ. 13,000லிருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தப்படும். வீடில்லாத ஏழைகளுக்கு ரூ. 20 கோடியில் வீடுகள் கட்டித் தரப்படும். தமிழகத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு.
மின்மிகை மாநிலம்
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே 2வது இடத்தில் உள்ளது தமிழகம். தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. எரிசக்தித் துறையில் புதிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாடு
நாட்டிலேயே முதலிடத்தில் தமிழகம் உள்ளது.
ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டம் 2023ஐ விரைவில் எட்டுவோம். 2019 ஜனவரியில் 2வது உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும்.
அந்நிய முதலீடுகள்
11 அரசுத் துறைகளிலிருந்து தொழில்நிறுவனங்களுக்குத் தேவையான சேவை எளிதாக்கப்பட்டுள்ளது. தமிழகம் இந்தியாவிலேயே 2வது சிறந்த பொருளாதாரமாக திகழ்கிறது. 2017-18ல் 56% கூடுதல் நேரடி அந்நிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.
ஜெ. பெயருடன் நிறைவு
நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழகத்தை மாற்றிட தொடர்ந்து உழைப்போம். தமிழகம் நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார். ஜெயலலிதா பெயரை கூறி உரையை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது பெயருடனே உரையை நிறைவு செய்தார்.