ஜெ. எதிர்த்ததையெல்லாம் வளைத்து வளைத்து அமலாக்கும் எடப்பாடி அரசு!
ஜெயலலிதா எதிர்த்து வந்த 3 திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா எதிர்த்து வந்த மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உள்ளிட்ட 3 திட்டங்களுக்கு முதல்வர் எடப்படி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஜெயலலிதா விரோத அதிமுக அரசு செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது தொடங்கப்பட்டது. துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை சுமார் 19 கி.மீ.தூரம் இந்த பறக்கும் சாலை 4 வழித்தடத்தில் கட்ட தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக ரூ.1530 கோடியும் ஒதுக்கப்பட்டது. கூவம் ஆற்றின் கரை ஓரமாக திட்டம் செயல்படுத்த, தீவிரமாக வேலைகள் நடைபெற்று வந்தன. ஆனால், 2011ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இந்த திட்டத்தை ஜெயலலிதா நிறுத்தி வைத்தார். கடந்த 6 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
ஜெ.வுக்கு எதிராக செயல்படும் எடப்பாடி அரசு
இந்நிலையில் ஜெயலலிதா ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்ட சென்னை துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள், ஈசிஆர் சாலை விரிவாக்கம், மதுரை வெளிவட்ட சாலை ஆகிய 3 திட்டப்பணிகளுக்கு, மத்திய அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல் அளித்துள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது எதிர்த்து வந்த திட்டங்களை அவரது மறைவுக்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்தி வருகிறார்.
டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2 நாள் பயணமாக டெல்லி சென்றார்.
நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு திட்டங்களுக்கு நிதி கேட்டார். மேலும் வர்தா புயல், வறட்சி நிவாரண நிதி உள்ளிட்ட நிதிகளை மத்திய அரசு உடனடியாக வழங்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
வெங்கையா நாயுடுவுடன் சந்திப்பு
நேற்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்தார். அப்போது சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள், வீடுகள் திட்டம், 2015 வெள்ள பாதிப்பு மேம்பாட்டு திட்டம், குடிசை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்து அவரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார்.
நிதின் கட்கரியை சந்தித்த எடப்பாடி
இதைத்தொடர்ந்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்தார். அப்போது மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். இந்த சந்திப்பின் போது சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், மதுரை உள்வட்ட ரிங்ரோடு, கிழக்குகடற்கரை சாலை 4 வழித்திட்டம் ஆகியவற்றை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ஜெ. எதிர்த்த திட்டங்கள்
மேலும் தமிழகத்தில் உள்ள 700 கிமீ சாலைகளை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறையிடம் ஒப்படைப்பது குறித்தும் ஆலோசித்தார். இதில் நிதின்கட்கரியை சந்தித்தபோது, எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல் வழங்கிய 3 திட்டங்களும், ஜெயலலிதா அரசால் முடக்கி வைக்கப்பட்ட திட்டங்களாகும். அதில் துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் 2009ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது தொடங்கப்பட்டது. அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது
துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை சுமார் 19 கி.மீ.தூரம் இந்த பறக்கும் சாலை 4 வழித்தடத்தில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூ.1530 கோடியும் ஒதுக்கப்பட்டது. கூவம் ஆற்றின் கரை ஓரமாக திட்டம் செயல்படுத்த, தீவிரமாக வேலைகள் நடைபெற்று வந்தன. ஆனால், 2011ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இந்த திட்டத்தை ஜெயலலிதா நிறுத்தி வைத்தார். கடந்த 6 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, தற்போது இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு தற்போது ஒப்புதல்
இதேபோல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடற்கரை ஓரமாக கிழக்கு கடற்கரை சாலையில் 10 ஆயிரம் கோடி செலவில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கும் தமிழக அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டமும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
ஜெ.எதிர்த்த திட்டங்களுக்கு அனுமதி
ஜெயலலிதா தலைமையிலான அரசு நிறுத்தி வைத்திருந்த மதுரை வெளிவட்ட சாலைக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜெயலலிதா அரசால் கிடப்பில் போடப்பட்ட திடங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.