தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நெருக்கடி.. அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி
தினகரன் ஆதரவு எம்.எம்.ஏக்கள் புயலை கிளப்பி வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
சென்னை: சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்களும் கலந்துகொண்டானர்.
அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சிப் பணிகளை கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து தொடங்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்கள் யாரும் இடையூறு செய்யக் கூடாது என்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூறியுள்ளனர்.
மேலும் நேற்று மாலை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது டிடிவி தினகரனை முன்னிலைப்படுத்த வேண்டும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற வேண்டும், இப்தார் விருந்து டிடிவி தினகரன் தலைமையில் நடத்த வேண்டும். இதற்கெல்லாம் சம்மதம் தெரிவித்தால் குடியரசுத்தலைவர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சொல்லும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் அதிமுக எம்.எல்.ஏக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பிரமாணப் பத்திரங்கள் குறித்தும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடத்துவது பற்றியும் ஆலோசனை செய்ததாக தெரிவித்தார். இருப்பினும் தினகரன் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதா தகவல்கள் தெரிவிக்கின்றன.