ஓ.பி.எஸ்சின் நிதித்துறையை கைப்பற்றிய எடப்பாடி பழனிச்சாமி! பொதுப்பணித்துறையும் அவருக்குத்தான்
அனுபவம் மிக்க ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த காலத்தில் கூட நிதித்துறை ஓ.பன்னீர்செல்வம் வசம்தான் இருந்தது. இப்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் நிதித்துறை மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சகங்கள் இருக்கிறது.
சென்னை: காபந்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வசம் நீண்டகாலமாக இருந்து வந்த நிதித்துறை இப்போது முதல்வராக பொறுப்பேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி வசம் வழங்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல் இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகையால் வெளியிடப்பட்டது. அதில் முதல்வர் வசமுள்ள துறைகள் குறித்து கூறப்பட்டுள்ளதை பாருங்கள்:
பொதுத்துறை, ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் நிர்வாக துறைகள், இந்திய வனத்துறை சேவை, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, நிதித்துறை, திட்டத்துறை, சட்டப்பேரவை, தேர்தல்கள் மற்றும் பாஸ்போர்ட்டுகள், நிர்வாக மேம்பாடு மற்றும் அதற்கான பயிற்சித்துறை, பொதுப்பணித்துறை, சிறிய நீர்பாசனம் உள்ளடங்கிய நீர்பாசனத்துறை, திட்ட பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறிய துறைமுகங்கள். இத்தனை துறைகளையும் எடப்பாடி பழனிச்சாமிதான் நிர்வகிக்க உள்ளார்.
அனுபவம் மிக்க ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த காலத்தில் கூட நிதித்துறை ஓ.பன்னீர்செல்வம் வசம்தான் இருந்தது. ஓ.பி.எஸ்தான் பட்ஜெட் தாக்கல் செய்வார். இப்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் நிதித்துறை மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சகங்கள் இருக்கிறது. மிக முக்கியமான இத்துறைகளை கைவசம் வைத்துள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி பலம் பொருந்தியவராக காட்சியளிக்கிறார்.