தினகரன் கோஷ்டிக்கு பதிலடி.. தனபாலுக்கு துணை முதல்வர் பதவி வழங்க எடப்பாடி திட்டம்?
சென்னை: சபாநாயகர் தனபாலுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து அவரை சமாதானப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முதல்வர் இன்று சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எப்படி எதிர்கொள்வது, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பதவிகளை பறித்தால் சட்ட சிக்கல் வருமா என்பதெல்லாம் குறித்து முதல்வர், சபாநாயகரிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது மேற்கு மண்டல ஒற்றுமையை குலைக்க சதி நடக்கிறது என்று எடப்பாடி, தனபாலிடம் புகார் கூறியதாகத் தெரிகிறது. தனபால் மேற்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை முதல்வராக முன்னிறுத்தும் பேட்டிகள் மூலம், ஆட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த தினகரன் தரப்பு முயல்வதாகவும், அதற்கு செவி சாய்க்க வேண்டாம் என்றும் தனபாலிடம் முதல்வர் கேட்டுக்கொண்டாராம்.
அதேநேரம், தலித் பிரிவை சேர்ந்த தனபாலுக்கு துணை முதல்வர் பதவி அளிக்க தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தெரிகிறது. 30 எம்எல்ஏக்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த சமூகத்தினருக்கு இப்படி ஒரு பிரதிநித்துவம் கொடுக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இரு துணை முதல்வர்கள் ஒரே ஆட்சியில் பதவி வகிக்க சட்டத்தில் இடமுள்ளது. கர்நாடகாவில் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அரசில், ஈஸ்வரப்பா மற்றும் ஆர்.அசோக் ஆகிய இருவர் துணை முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர் என்பது நமது அண்டை மாநில உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.