வேளாண் மண்டல மசோதா நிறைவேறிய போது திமுக அவையில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.. முதல்வர் உருக்கம்
சென்னை: காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக்க வழி வகை செய்யும் மசோதா நிறைவேறிய போது திமுக அவையில் இல்லாதது வருத்தமளிக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த 14-ஆம் தேதி நடப்பு நிதியாண்டு 2020-2021-க்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அந்த பட்ஜெட் மீதான விவாதம் தற்போது தமிழக சட்டசபையில் இரு தினங்கள் விடுமுறைக்கு பின்னர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கியது.
முதல்வர்
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே சேலம் தலைவாசல் அருகே கடந்த 9-ம் தேதி நடந்த விழாவில், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இதற்காக சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பெருமை
இந்த நிலையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போது தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். அவர் கூறுகையில் விவசாயியாக இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் பெருமை அடைகிறேன் என்றார்.
நிறைவேற்ற
கரூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சேர்க்கப்படாதது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த மசோதாவை சட்டசபை தேர்வுக் குழுவுக்கு அனுப்பிய பிறகே அது நிறைவேற்றப்பட வேண்டும் என்றார். இதற்கு முதல்வர் மறுப்பு தெரிவிக்கவே திமுக வெளிநடப்பு செய்தது. இதையடுத்து காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது.
முதல்வர்
அப்போது அவர் பேசுகையில் அதிமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால் திமுக வெளிநடப்பு செய்துள்ளது. திமுக வெளிநடப்பு செய்தது வருத்தம் அளிக்கிறது. வேளாண் மண்டல மசோதா நிறைவேறும் நேரத்தில் திமுக வெளிநடப்பு செய்து அரசியல் செய்கிறது. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான வேளாண் மண்டல மசோதா ஒரு மனதாக நிறைவேறும் என நினைத்தேன். ஒருமனதாக நிறைவேறாததற்கு வருத்தம் அடைகிறேன் என முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.