அதிகரிக்கும் சசி கோஷ்டி அட்டகாசம்... ஒதுங்கிடுங்க... எடப்பாடி பழனிச்சாமியின் ஓபன் 'வார்னிங்'!
சசி கோஷ்டியின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரிப்பதால் அமைதியாக ஒதுங்கிப் போய்விடுங்கள் என எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.
சென்னை: டெல்லி நெருக்கடிகள் பற்றியெல்லாம் எந்த கவலையுமே படாமல் சசிகலா கோஷ்டி தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபடுவதால் உங்களால் என் ஆட்சிக்கு ஆபத்து... அமைதியாக இருந்துவிடுங்கள் என வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அ.தி.மு.கவின் அணிகள் இணைப்பு தொடக்க நிலையிலேயே முறிந்து போய்விட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பும் பன்னீர்செல்வம் அணியும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்யும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
ஆட்சி அதிகாரம் நம் கையைவிட்டுப் போகவில்லை என்ற எண்ணத்தில் சசிகலா கோஷ்டி இப்போதும் வலம் வருகின்றன. ஆனால் அவர்களிடம், இது உங்கள் அரசு அல்ல' எனத் தெளிவாகவே கூறி அனுப்பிவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி.
மன்னார்குடி பிராஞ்ச் ஆபீசுகள்
ஒவ்வொரு முறை ஜெயலலிதா ஆட்சி அமையும்போதெல்லாம், மன்னார்குடி உறவுகள் சென்னையில் பல இடங்களில் புதிய அலுவலகங்களைத் திறந்து வைப்பார்கள். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணியிட மாற்றம், கட்சிப் பதவி எனக் கல்லா கட்டுவார்கள்.
நேரடி தலையீடு
ஆட்சி அதிகாரம் போன பிறகு வியாபாரத்தைக் கவனிக்கச் சென்றுவிடுவார்கள். 2016-ம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைந்ததும், இதேபோல் புதிய அலுவலகங்கள் தோன்றின. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நேரடியாக ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டனர் சசிகலா குடும்பத்தினர்.
மிரட்டல்
அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு, இந்த வேலைகளைச் செய் என மிரட்டல் தொனியில் அச்சுறுத்தினர். அமைச்சர்கள் மறுத்தால், பதவியில் நீடிக்கனும்னு ஆசை இருக்குதா? என மிரட்டிக் காரியம் சாதித்தனர்.
தொடரும் அட்டகாசம்
சசிகலாவும் தினகரனும் சிறைக்குச் சென்ற பிறகும், இவர்களது அட்டகாசம் எல்லை மீறிச் செல்கின்றது. குறிப்பாக, சசிகலாவின் உறவினர்கள் சிலர், ஆட்சியை நாம்தான் வழிநடத்தி வருகிறோம். எங்கள் கையைவிட்டு எதுவும் போகவில்லை. மோடியை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். இனி எங்களுக்கு சாதகமாகத்தான் எல்லாம் நடக்கப் போகிறது எனப் பேசி வருகின்றனராம். கூடவே, சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்து நிறைவேற்றிக் கொள்கின்றனர். ஆட்சி அதிகாரத்துக்குள் சசிகலா குடும்பம் கோலோச்சுவதை சில அமைச்சர்கள் விரும்பவில்லை. இதுகுறித்து, எடப்பாடி பழனிசாமியிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடியின் வார்னிங்
இதனையடுத்து, சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு பிரமுகரை அழைத்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அந்த சந்திப்பில், நாடு முழுவதும் உள்ள பவர்புல் 'லாபி'தான் உங்களுக்கு எதிராக செயல்படுகிறது. அதை எதிர்க்கும் சக்தி எனக்கும் இல்லை; உங்களுக்கும் இல்லை. உங்களுக்கு ஆதரவாக எதையும் என்னால் செய்ய முடியாது. சூழலைப் புரிந்து கொண்டு அரசியலில் இருந்து ஒதுங்குவது உங்களுக்கு நல்லது. என்னுடைய அரசாங்கம் தொடர வேண்டும் என்றாலும், இதுதான் ஒரே வழி. பொதுச் செயலாளர் பதவியை சசிகலா வைத்திருப்பதால் யாருக்கும் எந்த லாபமும் கிடையாது. அந்தப் பதவியால்தான் எல்லா பிரச்னைகளும் வந்து சேர்ந்தன. டெல்லியில் இருந்தபடியே உங்களுடைய நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்கிறார்கள். உங்களுக்கு ஆதரவாக எந்தப் பத்திரிகையில் என்ன வருகிறது என்பது முதற்கொண்டு மத்திய உளவுப்பிரிவு கவனித்து வருகிறது.
கோபம் அதிகரிப்பு
தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதை டெல்லி உற்று கவனிக்கிறது. கர்நாடக புகழேந்தியும் சம்பத்தும் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவதால், வேறு வகைகளில் மத்திய அரசின் கோபத்தை அதிகப்படுத்துகிறார்கள். ஆட்சி அதிகாரத்துக்குள் நீங்கள் தலையிடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. இல்லையென்றால், எனக்கும் சேர்த்தே ஆபத்து வரும் என மனம் திறந்து பேசி அனுப்பியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அமைச்சர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தியிருக்கிறாராம் எடப்பாடி.