நீங்க என்ன செஞ்சீங்க.. ஆர்.கே நகரில் எடப்பாடி, ஓபிஎஸ் கூட்டாக பிரச்சாரம்.. ஸ்டாலினுக்கு கேள்வி!
ஆர்.கே நகரில் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர், துணை முதல்வர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் அ.தி.மு.க சார்பில் மதுசூதனன் வேட்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். வாக்குபதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் பரபரப்பாக தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, வேலுமணி, எம்.பி வேலுமணி ஆகியோர் இன்று புதுவண்ணாரப்பேட்டையில் ஒரே வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
டெபாசிட் கிடைக்குதான்னு பாருங்க
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன் டெபாசிட் கூட வாங்கமாட்டார் என்கிற தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார். டெபாசிட் நாங்கள் வாங்குகிறோமா இல்லையா என்பதை மக்களிடம் பேசி நாங்கள் முடிவு செய்துகொள்கிறோம்.
மேயராக இருந்தபோது என்ன செஞ்சீங்க
ஆனால், சென்னை மாநகர மேயர், துணை முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து ஆர்.கே நகரில் நீங்கள் என்னென்ன திட்டம் நிறைவேற்றி இருக்கிறீர்கள் என்று பதில் சொல்லத்தயாரா என்று கேள்வி எழுப்பினார்.
அம்மா வழி வந்த மதுசூதனன்
மேலும், அம்மா வழி வந்த மதுசூதனன் இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்களுக்கு மீண்டும் தேவையான நல்ல விஷயங்கள் செய்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
21 வருஷமாக பதவியே இல்லாத மது
21 ஆண்டுகளாக எந்த பதவியிலும் இல்லாத அண்ணன் மதுசூதனன் தற்போது மீண்டும் உங்கள் முன் ஓட்டுக்கேட்டு வந்து உள்ளார். அவரை வெற்றி பெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டியது மக்களின் கடமை அதை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.