மக்களின் நலனுக்காக அல்லும் பகலும் பாடுபடுகிறார் பிரதமர் மோடி- முதல்வர் எடப்பாடியார்
மக்கள் நலனுக்காக அயராது உழைப்பவர் பிரதமர் நரேந்திர மோடி என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
Recommended Video
சென்னை: மக்கள் நலனுக்காக அயராது உழைப்பவர் பிரதமர் நரேந்திர மோடி என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தினத்தந்தியின் பவள விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
தைரியம், அன்பு, பொறுமை ஆகியவற்றின் வடிவமாகவே திகழ்கிறார். பல தொலைநோக்கு மற்றும் செயலமைப்பு திட்டங்களை செயல்படுத்தி இந்தியா மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்திட நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்தியாவை புதிய யுகத்திற்கு கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை, மக்கள் வழங்கிய பொறுப்பினை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடி நமது திருநாட்டுக்கு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறார்.
இத்தகைய பெருமைமிக்க நமது பாரத பிரதமர் முன்னிலையில் இந்த விழா நடைபெறுவது என்பதை வரலாற்று நிகழ்வாகவே நான் கருதுகிறேன். ஜனநாயகத்தின் 4 தூண்களாக இருப்பது ஆட்சி அதிகாரம், அரசு நிர்வாகம், நீதி, பத்திரிகைகளாகும்.
பத்திரிகை துறை ஜனநாயகத்தின் 4-ஆவது தூணாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் வரும் நியூஸ் என்ற சொல்லுக்கு நார்த், ஈஸ்ட், வெஸ்ட், சவுத் ஆகிய 4 திசைகளை குறிப்பதாகும். உலகின் 4 திசைகளிலும் நடைபெறும் அன்றாட செய்திகளை உடனடியாக உண்மையாக மற்றும் உணர்வுபூர்வமாக மக்களிடம் கொண்டு செல்லும் பணியை ஆற்றுவது பத்திரிகைகள்தான்.
மக்களின் நாடி நரம்புகளை பிடித்து பார்த்து அவர்களின் எண்ணங்களை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் அமைப்பாக செயல்படுவது பத்திரிகை துறைதான் என்றார் அவர்.