தீரன் பெரியபாண்டிக்கு கறுப்புப் பட்டை அணிந்து ஈபிஎஸ், ஓபிஎஸ் வீர வணக்கம்
ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த சண்டையில் வீரமரணமடைந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
Recommended Video
சென்னை: ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நகைக்கொள்ளையர்களை கைது செய்யப் போன போது அங்கு நடந்த சண்டையில் உயிரிழந்தார் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி. அவரது உடல் ஜோத்பூரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
சென்னை விமானநிலையத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட மேடையில் பெரியபாண்டியின் உடல் வைக்கப்பட்டு மாலை 6 மணிவரை அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கைகளில் கறுப்புப்பட்டை அணிந்திருந்தனர். அதேபோல அஞ்சலி செலுத்த வந்த காவலர்கள், உயர்காவல்துறை அதிகாரிகள் துக்கத்தை பதிவு செய்யும் வகையில் கறுப்புப்பட்டை அணிந்திருந்தனர்.
பெரியபாண்டியின் உறவினர்கள் நேற்றே சொந்த ஊருக்கு சென்று விட்டனர். சென்னையில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் பெரியபாண்டியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள், அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.