திருச்சி உஷா மரணம்.. அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - சட்டசபையில் முதல்வர் விளக்கம்
திருச்சியில் கர்ப்பிணிப்பெண் உஷா மரணமடைந்த விவகாரம் குறித்து குற்றவியல் விசாரணை நடைபெற்று வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : திருச்சியில் கர்ப்பிணிப் பெண் உஷா மரணமடைந்த விவகாரம் குறித்து குற்றவியல் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிவின் படி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டசபையில் திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் திருச்சியில் மரணமடைந்த உஷா விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். உஷா மரணத்திற்கு இழப்பீடாக ரூ. 7 லட்சம் கொடுத்தது போதாது ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அளித்த விளக்கம் பின்வருமாறு :
திருச்சி மாவட்டம் துவாக்குடி சுங்கச்சாவடி அருகில் 7.3.2018 அன்று காவல் ஆய்வாளர் காமராஜ் தன்னுடைய குழுவினருடன் சோதனைச் சாவடியில் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது தஞ்சாவூர் சாலையில் தலைக்கவசம் அணியாமல் வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை ஆய்வாளர் நிறுத்தி வாகனத்தின் சாவியை எடுத்துள்ளார்.
ராஜா சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை
அந்த வாகனத்தை ஓட்டி வந்த தஞ்சாவூர் மாவட்டம் சோளமங்களத்தை சேர்ந்த ராஜா என்பவர் தான் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பதாகவும் சாவியைத் தருமாறும் கேட்டுள்ளார். காவலர் எதிர்பாராத சமயத்தில் ராஜா வாகனத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய மனைவியுடன் வேகமாக சென்றுள்ளார்.
நிலை தடுமாறி விழுந்த ராஜா
உடனே காவல் ஆய்வாளர் மற்றொரு வாகனத்தில் விரட்டிச் சென்று பாரத மிகுமின்நிலையம் கணேசா ரவுண்டானா அருகே நிறுத்தியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்து ராஜாவும், பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி உஷாவும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவர்கள் உஷா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கல்வீச்சில் ஈடுபட்ட மக்கள்
இந்த சம்பவம் பற்றி அறிந்த சுமார் 2 ஆயிரம் பேர் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்து கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த கல்வீச்சு சம்பவத்தில் 44 அரசுப் பேருந்துகள், 6 காவல் வாகனங்கள் மற்றும் 1 வருவாய்த்துறையின் வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. 1 பெண் காவலர் உள்பட 11 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது.
வழக்குகள் பதிவு
இதனால் வேறு வழியின்றி காவலர்கள் குறைந்த அளவு பலப்பிரயோகம் செய்து அவர்களை கலைந்து போகச் செய்து போக்குவரத்தை சரி செய்தனர். உஷா இறந்தது தொடர்பாக பெல் காவல் நிலையத்தில் உஷாவின் கணவர் ராஜா புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும் சாலைமறியல், கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டது தொடமர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
குற்றவியல் விசாரணை நடக்கிறது
உயிரிழந்த உஷாவின் உடல் திருச்சி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு 8.3.2018 அன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உஷாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு அவரின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் திருவெறும்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணை முடிவில் காவல் ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.